சென்னை: தென்கொரியாவின் சாஸ்வேன் நகர மேயரின் பிரதிநிதிகள் நேற்று சென்னை மாநகராட்சி ஆணையர் பிரகாசை சந்தித்து உரையாடினார். இதில் தொழில், கலாச்சார உறவை வலுப்படுத்தவது தொடர்பாக ஆலோசனை நடத்தப்பட்டது. சென்னை மாநகராட்சியில் பல்வேறு திட்டங்கள் செயல்பட்டு வருகிறது. இந்த திட்டங்களுக்கு நிதி அளிப்பது மற்றும் திட்டங்கள் தொடர்பான தொழில்நுட்பங்களை பகிர்ந்து கொள்வது தொடர்பாகவும் சென்னை மாநகராட்சி பல்வேறு நாடுகளுடன் புரிந்துணர்வு ஒப்பந்தம் செய்து கொண்டுள்ளது. சமீபத்தில் ஐரோப்பிய யூனியன் கூட்டமைப்புடன் சென்னை மாநகராட்சி புரிந்துணர்வு ஒப்பந்தம் செய்து கொண்டது. இதனைத் தொடர்ந்து கடந்த ஆகஸ்ட் மாதம் ஆஸ்திரேலியா நாட்டின் பிளாக் டவுன் மேயர் தலைமையிலான குழு சென்னை மாநகராட்சி ஆணையரை சந்தித்து உரையாடினர்.
இந்நிலையில் தென் கொரியாவின் சாஸ்வேன் நகர மேயரின் பிரநிதிகள் ஷின்மால்சக், ஹாநெயுன், மைஜியாங், கிம் யாஸ்மின் ஆகியோர் சென்னை மாநகராட்சி ஆணையர் பிரகாஷ் மற்றும் இணை ஆணையர் லலிதா ஆகியோருடன் ஆலோசனை நடத்தினர். இந்த சந்திப்பில் சென்னை மாநகராட்சியின் அமைப்பு, செயல்பாடு, செயல்படுத்தபட்டு வரும் பல்வேறு திட்டங்கள் குறித்து அவர்களுக்கு விளக்கம் அளிக்கப்பட்டது. இதைபோன்று தென் கொரியாவில் செயல்படுத்தப்படும் திட்டங்கள் தொடர்பாக அவர்கள் விளக்கம் அளித்தனர். மேலும் இரு நகரங்களுக்கு இடையே தொழில் மற்றும் கலச்சார உறவை வலுப்படுத்துவது தொடர்பாகவும் ஆலோசனை நடத்தப்பட்டது.