×

சேதமடைந்து காணப்படும் புறவழிச்சாலை : வாகன ஓட்டிகள் கடும் அவதி

புவனகிரி: சிதம்பரம் நகருக்கு புறவழிச்சாலை பல ஆண்டுகளுக்கு முன் அமைக்கப்பட்டது. சிலுவைபுரம் கிராமத்தில் துவங்கி கடவாச்சேரி வரை செல்லும் இந்த சாலை பல இடங்களில் பழுதடைந்துள்ளது. சாலையின் நடுவே உள்ள சிறுசிறு பாலங்கள் உள்ள இடங்களில் இருபுறமும் சாலை உள் வாங்கியுள்ளது. இதுபோல் சாலை ஓரங்களிலும் பல்வேறு இடங்களில் சாலையில் பிளவு ஏற்பட்டு போக்குவரத்துக்கு லாயக்கற்ற நிலையில் உள்ளது. இதனால் இந்த வழித்தடத்தில் செல்லும் நான்கு சக்கர வாகனங்கள், இருசக்கர வாகனங்கள் உள்ளிட்டவை தரமற்ற சாலையால் அடிக்கடி விபத்துக்கு உள்ளாகிறது. குறிப்பாக இருசக்கர வாகனங்களில் செல்வோர் புறவழிச்சாலையில் தினமும் விபத்துக்குள்ளாகி காயமடைகின்றனர்.

சில நேரங்களில் விபத்துகளில் உயிரிழப்பும் ஏற்படுகிறது.நாளுக்கு நாள் விபத்துகள் அதிகரித்து வரும் நிலையில் தேசிய நெடுஞ்சாலைத்துறை சார்பில் இந்த சாலையை சீரமைப்பதற்கான எந்தவித நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை. இதனால் வாகன ஓட்டிகள் அச்சத்துடனேயே இந்த சாலையை கடந்து செல்கின்றனர். எனவே தேசிய நெடுஞ்சாலைத்துறை உடனடியாக கவனம் செலுத்தி புறவழிச்சாலையில் சேதமடைந்த இடங்களில் புதிதாக சாலை அமைக்க வேண்டும் என பொதுமக்களும், வாகன ஓட்டிகளும் வலியுறுத்தி உள்ளனர்.



Tags : Motorists , Damaged,sidewalk,Motorists, serious, trouble
× RELATED பிரதமர் அடிக்கல் நாட்டியும்...