×

திருச்செங்கோடு அருகே கடன் தொல்லையால் விபரீதம்: மனைவி, மகளுடன் ரிக் அதிபர் தற்கொலை

திருச்செங்கோடு: திருச்செங்கோடு அருகே கடன் தொல்லையால், மனைவி, மகளுடன் ரிக் அதிபர் விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. நாமக்கல் மாவட்டம், திருச்செங்கோடு தாலுகா எலச்சிபாளையம் ஒன்றியம் கூத்தம்பூண்டி சாயக்காடு பகுதியைச் சேர்ந்தவர் மோகன்(54). ரிக் அதிபரான இவரது மனைவி நிர்மலா(47). இவர்களுக்கு நவீன்குமார்(24) என்ற மகனும் சௌம்யா(21) என்ற மகளும் உள்ளனர். மகன் நவீன்குமார் பிஎஸ்சி அக்ரி முடித்து விட்டு, மகாராஷ்டிரா மாநிலம் சோலாப்பூரில் தங்கியிருந்து ரிக் தொழிலை கவனித்து வருகிறார். சௌம்யா கோவையில் உள்ள சட்டக்கல்லூரியில் முதலாம் ஆண்டு படித்து வந்தார். இதனிடையே, மோகனுக்கு ரிக் தொழிலில் பலத்த நஷ்டம் ஏற்பட்டது. இதை சமாளிக்க, கடன் வாங்கி மாணிக்கம்பாளையத்தில் பெரிய அளவில் மளிகை கடை நடத்தினார். ஆனால், அதிலும் நஷ்டம் ஏற்பட்டது. இதனை தொடர்ந்து, நிலத்தை குத்தகைக்கு எடுத்து விவசாயம் செய்து வந்தார். அதிலும் போதிய வருமானம் கிடைக்காததால் மிகுந்த மன உளைச்சலுக்கு ஆளானார்.

இந்நிலையில், கடன் கொடுத்தவர்கள் பணத்தை திரும்பக்கேட்டு நெருக்கடி கொடுக்கத் தொடங்கினர். கடன் தொகைக்காக அவரது நிலத்தை, நிதி நிறுவனத்தார் எடுத்துக் கொண்டதாக கூறப்படுகிறது. இதனால் மனமுடைந்த அவர், குடும்பத்துடன் தற்கொலை செய்து கொள்ள முடிவெடுத்தார். இதுபற்றி விடுமுறையில் வீட்டிற்கு வந்திருந்த மகள் செளமியாவிடமும் கூறியுள்ளார். இந்நிலையில் நேற்று அதிகாலை 3 மணியளவில், மோகன், நிர்மலா, சௌமியா ஆகிய மூவரும், தென்னை மரத்திற்கு பயன்படுத்தப்படும் செல்பாஸ் என்ற விஷ மாத்திரையை பொடி செய்து குடித்து மயங்கினர். அப்போது உயிருக்கு போராடிய நிலையில், மோகன் தனது தம்பி அன்பழகனுக்கு போன் செய்து, நாங்கள் மூவரும் விஷம் குடித்து விட்டோம், நாங்கள் இறந்தவுடன் இறுதி சடங்கை செய்து விடு என கூறி விட்டு இணைப்பை துண்டித்தார். இதைக்கேட்டு அதிர்ச்சியடைந்த அன்பழகன், உடனடியாக மோகன் வீட்டிற்கு விரைந்து சென்றார்.

அங்கு சென்று பார்த்த போது, கதவு உள்பக்கம் தாழிட்டு இருந்தது. பின்னர், கதவை உடைத்துக் கொண்டு உள்ளே சென்று பார்த்தபோது, அவரது அண்ணி நிர்மலா இறந்து கிடந்தார். மேலும், மோகன், சௌம்யா ஆகியோர் உயிருக்கு போராடிக் கொண்டிருந்தனர். உடனடியாக இருவரையும் மீட்டு, திருச்செங்கோடு அரசு மருத்துவமனைக்குக் கொண்டு சென்றார். ஆனால், செல்லும் வழியிலேயே மோகனும் இறந்து விட்டார். ஈரோடு தனியார் மருத்துவமனையில் சேர்க்கப்பட்ட சௌமியா, சிகிச்சை பலனின்றி சிறிது நேரத்தில் உயிரிழந்தார். மகன் வெளியூரில் இருந்ததால் அவர் தப்பினார்.

இது குறித்து தகவல் அறிந்ததும், சம்பவ இடத்திற்கு விரைந்து சென்ற வேலகவுண்டன்பட்டி போலீசார் விசாரணை நடத்தினர். அப்போது மோகன், எழுதி வைத்திருந்த கடிதம் ஒன்று சிக்கியது. அதில், ‘எங்களது  தற்கொலைக்கு யாரும் காரணம் இல்லை. கடன் சுமை அதிகரித்து விட்டது. அதனை அடைக்க முடியாததால் தற்கொலை செய்து கொள்கிறோம். என் மகனிடம் யாரும், எதையும் கேட்க வேண்டாம். அவன் விருப்பப்படி வாழட்டும்,’ என எழுதியிருந்தது. இதனை தொடர்ந்து, மூவரின் உடல்களையும் போலீசார் மீட்டு, திருச்செங்கோடு அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். தொழில் நஷ்டத்தால் ஏற்பட்ட கடன் சுமையால், ஒரு குடும்பமே தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை  ஏற்படுத்தியுள்ளது.

நாமக்கல் மாவட்டத்தில் அதிகளவில் கந்துவட்டி தொழில் நடக்கிறது. ஆரம்பத்தில் கடன் கொடுத்துவிட்டு பின்னர் கடன் கட்ட முடியாமல் போனால் சொத்துக்களை பறிப்பதும் ஆட்களை வைத்து மிரட்டுவதும் தொடர்கதையாக உள்ளது. மோகனையும் அதுபோல கடன் கொடுத்தவர்கள் நெருக்கடி கொடுத்து அவரை மன உளைச்சலுக்கு ஆளாக்கியுள்ளதாலேயே அவர், குடும்பத்துடன் தற்கொலை செய்துகொண்டுள்ளார். எனவே அவருக்கு கடன் கொடுத்தவர்கள் பற்றி போலீசார் விசாரித்து வருகின்றனர்.

Tags : Rick Chancellor ,suicide ,Tiruchengode Suicide , Suicide
× RELATED தர்மபுரி அருகே இன்ஸ்டாகிராம்...