புதுச்சேரி: புதுச்சேரி துணைநிலை ஆளுநர் கிரண்பேடி மீது நானே நீதிமன்ற அவமதிப்பு வழக்கு தொடருவேன் என்று முதலமைச்சர் நாராயணசாமி ஆவேசமாக தெரிவித்துள்ளார். இதுகுறித்து முதலமைச்சர் நாராயணசாமி செய்தியாளர்களிடம் கூறியதாவது: பல்வேறு மாநிலங்களில் தனது அதிகாரத்தை பயன்படுத்தி ஜனநாயகத்தை தங்களின் காலில் போட்டு மிதித்து ஆட்சியமைத்து வந்த பாஜகவின் முயற்சி மகாராஷ்டிராவில் தோல்வியடைந்திருப்பதாகவும், இந்த விவகாரத்தில் ஜனநாயகத்தை காப்பாற்றிய உச்சநீதிமன்றத்திற்கு தனது நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன் என்று கூறினார்.
மேலும் உச்சநீதிமன்ற உத்தரவை மீறியும் மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட அரசுக்கு தொடர்ந்து தொல்லைகொடுத்து வரும் ஆளுநர் கிரண்பேடி அரசு அதிகாரிகளையும் போலீசார் போல் நடத்தி அவர்களை மிரட்டி அராஜகத்தில் ஈடுபட்டு வருவதாக குற்றம்சாட்டினார். இது தொடர்பான வழக்கில் வரும் 11-ம் தேதி உயர்நீதிமன்றத்தில் நல்ல முடிவு கிடைக்கும் என எதிர்பார்ப்பதாகவும், இருப்பினும் உயர்நீதிமன்ற உத்தரவை மீறி செயல்பட்டு வரும் கிரண்பேடி மீது நானே நேரடியாக நீதிமன்ற அவமதிப்பு வழக்கை தொடருவேன் என ஆவேசமாக கூறினார்.தொடர்ந்து பேசிய முதலமைச்சர் நாராயணசாமி, புதுச்சேரியில் பெண்கள் பாதுகாப்புக்கு முன்னுரிமை வழங்கும் வகையில் அவர்கள் அளிக்கும் புகார்களை தனிப்பிரிவு அமைத்து விசாரிக்க காவல்துறைக்கு உத்தரவிட்டுள்ளதாக கூறினார்.
இதனையடுத்து புதுச்சேரியில் ரவுடிகள் ஒருவரை ஒருவர் பழிவாங்கும் நோக்கில் கொலை சம்பவம் நடைபெற்று வரும் நிலையில் ரவுடிகள் மீது குண்டர் சட்டத்தை நடைமுறைப்படுத்த காவல்துறைக்கு உத்தரவிட்டுள்ளதாக கூறினார். மேலும் புதுச்சேரியில் கடந்த 4 தினங்களாக தொடர்ந்து கனமழை பெய்து வரும் நிலையில் மழை பாதிப்புகளை கண்காணிப்பதற்காக 24 மணிநேர கட்டுப்பாட்டு அறை திறந்திருப்பதாகவும், மழை பாதிப்புகளை சரிசெய்து செய்ய பேரிடர் மேலாண்மை துறை அதிகாரிகளை களத்தில் இருக்குமாறு உத்தரவிட்டுள்ளதாக கூறினார்.