×

திருமணத்துக்கு சென்றபோது பயங்கரம் கார் விபத்தில் பெண் உட்பட 2 பேர் பலி

சென்னை: சென்னை கல்பாக்கம் அணுமின் நிலையத்தில் கேரளாவை சேர்ந்த சஜீஷ் வேலை பார்த்து வருகிறார். இவரது மனைவி சரிதா. இவர்கள் அணுமின்நிலைய குடியிருப்பில் வசிக்கின்றனர். இந்நிலையில் கேரளாவை சேர்ந்த சஜீஷின் மாமனார் கோழிக்கோடு அடுத்த வடகரா பகுதியை சேர்ந்த தம்பதி ராஜசேகர் (68). மாமியார் சாந்தா (65) ஆகியோர் இரண்டு நாட்களுக்கு முன்பு சென்னை வந்தனர். இந்நிலையில் பூந்தமல்லியில் நேற்று காலை தன் உறவினர் வீட்டு திருமணத்தில் கலந்து கொள்வதற்காக காரில் ராஜசேகர், சாந்தா ஆகியோர் காரில் சென்றனர்.  புதுப்பட்டினத்தை சேர்ந்த கண்ணன் (42) என்பவர் காரை ஓட்டினார். திருப்போரூர் அருகே ஆலத்தூரை அடுத்துள்ள கருங்குழி பள்ளம் என்ற இடத்தில் கார் வந்தபோது எதிர் திசையில் புதுச்சேரி நோக்கி சென்ற ஒரு டிராவல்ஸ் நிறுவன கார் திடீரென கட்டுப்பாட்டை இழந்து ஒரு கார் மீது மோதியது.

பின்னர் அந்த கார் சாலை தடுப்பை உடைத்து கொண்டு, எதிரே பூந்தமல்லி நோக்கி ராஜசேகர் சென்ற காரின் மீது வேகமாக மோதியது. இதில் ராஜசேகரின் மனைவி சாந்தா (65), கார் டிரைவர் கண்ணன் (42) ஆகியோர் சம்பவ இடத்திலேயே உடல் நசுங்கி பரிதாபமாக இறந்தனர். ராஜசேகர் படுகாயம் அடைந்து உயிருக்கு போராடினார். போலீசார் மற்றும் திருக்கழுக்குன்றம் தீயணைப்பு படையினர் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்தனர். ராஜசேகரை மீட்டு அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். சாந்தா, டிரைவர் கண்ணன் சடலங்களை கைப்பற்றி, செங்கல்பட்டு அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இதுகுறித்து திருப்போரூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து, டிராவல்ஸ் நிறுவன கார் டிரைவர் சரவணன் (43) என்பவரை கைது செய்தனர்.

Tags : Two ,car accident , Two killed, car, accident
× RELATED மீனம்