புதுடெல்லி: பெண்களுக்கு எதிரான குற்றங்களை கண்டித்து நாடாளுமன்றத்துக்கு வெளியே டெல்லியை சேர்ந்த இளம்பெண் நேற்று தனிமை போராட்டத்தில் ஈடுபட்டார். ஐதராபாத்தில் கால்நடை பெண் மருத்துவர் ஒருவரை நான்கு பேர் பலாத்காரம் செய்து, எரித்து கொன்ற சம்பவம் நாட்டையே உலுக்கியுள்ளது. அதேபோல், ஜார்கண்ட் மாநிலத்தில் 25 வயதான சட்ட மாணவி ஒருவர் 12 பேர் கொண்ட கும்பலால் பலாத்காரம் செய்து, படுகொலை செய்யப்பட்டார். இந்நிலையில், பெண்களுக்கு எதிரான குற்றங்கள் அதிகரிப்பதை கண்டித்து நாடாளுமன்றத்திற்கு வெளியே டெல்லியை சேர்ந்த இளம்பெண் அனு துபே, நேற்று தனியாக போராட்டத்தில் ஈடுபட்டார்.
``என்னுடைய நாட்டில் நான் ஏன் பாதுகாப்பாக உணர முடியவில்லை?’’ என்ற பதாகையை ஏந்தியபடி அவர் மவுனமாக அமர்ந்து இருந்தார். போலீசார் அவரை கைது செய்து காவல் நிலையத்துக்கு அழைத்து சென்றனர். உடனே, டெல்லி மகளிர் ஆணையக் குழு காவல் நிலையத்துக்கு வந்து பேசியதும், அவர் விடுவிக்கப்பட்டார்.