×

முறையான திட்டமிடல் இல்லாததால் சிறு மழைக்கே தாக்குப்பிடிக்காத உடன்குடி அனல் மின்நிலையம்

*லாரி, ஜேசிபி வாகனங்கள் மூழ்கும் அபாயம்

உடன்குடி :  முறையான திட்டமிடல் இல்லாமல் அமைக்கப்பட்டு வரும் உடன்குடி அனல்மின் நிலையம் சாதாரண மழைக்கே வெள்ளத்தில் சிக்கியுள்ளது. அனல் மின் நிலைய வளாகத்தில் ஆங்காங்கே நிறுத்தி வைக்கபட்டிருக்கும் லாரி, ஜேசிபி உள்ளிட்ட கனரக வாகனங்களும் மழைநீரில் சிக்கியுள்ளன.தமிழகம் வளர்ச்சி பாதையில் செல்ல தொழில் நிறுவனங்களை நிறுவவும் அதன் முக்கியத்துவத்தை கருத்தில் கொண்டு மின் உற்பத்தியை அதிகரிப்பதற்காகவும் 2007ம் ஆண்டு அக்டோபரில் தூத்துக்குடி மாவட்டம், உடன்குடியில் அனல் மின் நிலையம் நிறுவுவதற்கு உடன்குடி பவர் கார்ப்பரேசன் என்ற நிறுவனம் ஆரம்பிக்கப்பட்டது.

 இந்நிலையில் கடந்த 2012 பிப்ரவரி 24ம் தேதி உடன்குடி அனல்மின் நிலைய திட்டத்தை தமிழக அரசே அமைக்கும் என மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதா அறிவித்தார்.  800 மெகாவாட் அனல்மின் நிலையத்திற்கு 2012 மார்ச் 27ம் தேதி தமிழ்நாடு மின்தொடர் கழகம் ஒப்புதல் அளித்தது. அதன் பின், 2013 பிப்ரவரி 1ம் தேதி 800 மெகாவாட்டிற்கு பதிலாக 680 மெகாவாட் மின்உற்பத்தி செய்யப்படும் என கூறி வந்த நிலையில் மாசுக்கட்டுப்பாட்டு வாரியம் அனுமதி வழங்கியது.
பல்வேறு நிர்வாக குழப்பங்களுக்கு இடையே இப்பணிக்கு புதிய டெண்டர் விடப்பட்டது. ஆனால் அனல்மின் நிலையம் அமைவதற்கென 305 ஹெக்டேர் புறம்போக்கு நிலம், 175 ஹெக்டேர் பட்டா நிலம் என மொத்தம் 480 ஹெக்டர் நிலம் கையப்படுத்தப்பட்டு டிஎன்இபி என கற்கள் நடப்பட்டன.

 இதனையடுத்து 7ஆயிரத்து 359 கோடி ரூபாய் மதிப்பீட்டில் அனல்மின் நிலையத்திற்கு கடந்த ஆண்டு ஜனவரி 29ம் தேதி சென்னையில் இருந்து முதல்வர் எடப்பாடி பழனிசாமி காணொளி காட்சி மூலம் அடிக்கல் நாட்டினார்.
அனல் மின்நிலையம் அமையுமிடம் நீர்ப்பிடிப்பு பகுதியாகும். திருச்செந்தூர் எல்லப்பநாயக்கன்குளத்தில் இருந்து தண்ணீர் மறுகால் பாய்ந்து குலசேகரன்பட்டினம் தருவைகுளம் வரும் நீர்வழி தடத்தில் தான் தற்போது அனல்மின் நிலையத்திற்குரிய முதற்கட்ட பணிகள் நடந்து வருகிறது.

 இப்பகுதி கடல் மட்டத்தை விட குறைவாக இருப்பதால் அதனை உயர்த்த சாத்தான்குளம், நாசரேத், மெஞ்ஞானபுரம், நகனை, பள்ளக்குறிச்சி, படுக்கப்பத்து, உடன்குடி, திருச்செந்தூர் என பல பகுதிகளில் தூர்வாரப்படாத குளங்கள், காணாமல் தூர்ந்துபோன குளங்களை தூர்வாருவதாக கூறியும் விவசாய பயன்பாட்டிற்கு என கூறியும் தினமும் நூற்றுக்கணக்கான லாரிகளில் இரவு, பகலாக மண் கொண்டு சென்று அனல்மின் நிலையம் அமையவிருக்கும் பகுதியை உயர்த்தும் முயற்சியில் ஈடுபட்டனர். இதில் ஆயிரக்கணக்கான தொழிலாளர்கள் இரவு, பகலாக பணியாற்றி வருகின்றனர்.

 முதற்கட்டமாக தரைமட்டத்தை உயர்த்தும் பணி, சீரமைக்கும் பணிகள் ஒருபுறம் நடந்து வந்தாலும், மறுபுறம் கட்டுமானப் பணிகளும் ஜரூராக நடந்து வந்தது. அனல்மின் நிலையம் அமையவிருக்கும் வளாகத்தினுள்ளேயே கான்கீரிட் அமைக்கும் நவீன இயந்திரங்கள் அமைக்கப்பட்டு கட்டிடங்கள் கட்டுவதற்குரிய ஆரம்ப கட்ட பணிளும், சுற்றுசுவர் அமைக்கும் பணிகளும் தீவிரமாக நடந்து நடந்தது. அனல்மின் நிலையம் அமையவிருக்கும் பகுதியில் சுமார் 10அடி ஆழத்திற்கு குழி தோண்டினாலே நீர் ஊற்று எடுக்கும் அளவிற்கு நீர்ப்பிடிப்பு பகுதியாகும்.

 தற்போது பரவலாக பருவமழை பெய்ததால் அனல்மின்நிலைய வளாகத்தினுள் அதிகளவில் தண்ணீர் தேங்கி கிடக்கிறது. இதனை வெளியேற்ற அங்குள்ள ஒப்பந்ததாரர்கள் தடுப்பணையை உடைக்க முயல்வதாக தகவல் பரவியதையடுத்து குலசேகரன்பட்டினம் பொதுமக்கள் திரண்டது குறிப்பிடதக்கது. மேலும் அனல்மின்நிலைய வளாகத்தினுள் தேங்கி உள்ள மழைநீரை அகற்ற முடியாமல் அரசு அதிகாரிகளும், ஒப்பந்ததாரர்களும் திணறி வருகின்றனர்.
அங்கு பணிபுரிபவர்கள் பெரும்பாலும் வெளியூர் ஆட்களாக இருப்பதால் இந்த மணலின் தன்மை அறியாமல் லாரிகள், ஜேசிபி வாகனத்தை வழக்கம் போல் நிறுத்தி வைத்து விட்டுச் சென்றுள்ளனர். தற்போது மழைநீர் அதிகளவில் தேங்கியுள்ளதால் வாகனங்களை எடுக்க முடியாமல் சிக்கியுள்ளன. தற்போது சாதரண மழைக்கே வெள்ளத்தில் சிக்கியுள்ள உடன்குடி அனல்மின்நிலையம் குறித்து வலைதளங்களில் ஏராளமானவர்கள் விமர்சனங்கள் செய்து வருகின்றனர்.

ஆய்வு நடத்தவில்லை

தருவைக்குளம் பகுதி நீர்ப்பிடிப்பு இடம் என்பது குறித்து முறையான ஆய்வுகள் ஏதும் நடத்தப்படாதது தான் இந்நிலைக்கு காரணம் என கூறப்படுகிறது. மேலும் பணிகளுக்கென ராட்சத லாரிகளில் ஏராளமான இரும்பிலான பைப்புகள், கம்பிகள் கொண்டு வரப்பட்டுள்ளன. அவைநீண்ட நாட்கள் தண்ணீரில் கிடந்தால் அதன் உறுதி தன்மை எவ்வாறு இருக்கும் என்பது கேள்விக்குறி. அனல்மின்நிலையத்தில் பணிபுரியும் வேலையாட்கள் தங்க அதன் பகுதியிலேயே தற்காலிக செட்டுகள் அமைத்துள்ளனர். மழைநீர் தேங்கி கிடக்கும் பகுதியில் தங்கியுள்பணியாளர்கள் தங்கள் பொழுதுபோக்கிற்காக பிளாஸ்டிக் கேன்களால் ஆன படகுகள் செய்து அதன் மூலம் அனல்மின்நிலைய வளாகத்தினுள் சென்று மீன்பிடித்தல் உள்ளிட்டவைகளை ஜாலியாக செய்து வருகின்றனர்.

Tags : power plant , udangudi,lack ,proper planning,power plant
× RELATED புளிய மரத்தில் கார் மோதல்; மேட்டூர் அனல் மின்நிலைய பெண் அதிகாரி, மகன் பலி