தொண்டி : பாலித்தீன் பயன்பாட்டை தவிர்க்க வலியுறுத்தி, விழிப்புணர்வு ஏற்படுத்தும்விதமாக தேவகோட்டை வாலிபர் கொல்கத்தா - கன்னியாகுமரி வரையும், பின்னர் அங்கிருந்து குஜராத் வரை நடைபயணம் மேற்கொண்டுள்ளார். பாலித்தீன் பயன்பாட்டால் மண் வளம் பாதிக்கப்படுவதோடு சுற்றுப்புற சுகாதார சீர்கேடு ஏற்படுகிறது. இதன் பயன்பாட்டிறக்கு அரசு தடை விதித்தபோதும், அதன் பயன்பாடு தாராளமாக உள்ளது. எனவே, பொதுமக்களிடம் விழிப்புணர்வை ஏற்படுத்தும்விதமாக, சிவகங்கை மாவட்டம், தேவகோட்டையை சேர்ந்த இமானுவேல் ஜோசப்ராஜ் (32), கொல்கத்தாவிலிருந்து சென்னை வழியாக கிழக்கு கடற்கரை சாலையில் கன்னியாகுமரிக்கும், அங்கிருந்து குஜராத்திற்கும் நடைபயணம் மேற்கொண்டுள்ளார். 98வது நாளாக அவர் நேற்று முன்தினம் மாலை ராமநாதபுரம் மாவட்டம், தொண்டிக்கு வந்தார்.
இமானுவேல் ஜோசப்ராஜ் கூறுகையில், ‘‘கடந்த ஆக.21ம் தேதி கொல்கத்தாவிலிருந்து நடைபயணத்தை துவக்கினேன். பாலித்தீனால் மண் வளம் பாதிக்கப்படுவதோடு நிலத்தடி நீர்மட்டமும் குறைகிறது. இதை தவிர்க்க வேண்டியும், மரப்பொருட்களை பயன்படுத்த வலியுறுத்தியும், கிராமப்புற மக்களிடமிருந்து இயற்கை வைத்தியம் மற்றும் வாழ்க்கை முறையை கற்றுக்கொள்ளவும் வலியுறுத்தி இப்பயணம் மேற்கொண்டுள்ளேன். மேலும், அதிகளவு இயற்கை வளங்களை சுரண்டி விட்டோம். இனிமேலும் இது தொடராமல் இருக்கவும் பொதுமக்களிடம் எடுத்து கூறி வருகிறேன்’’ என்றார்.