சென்னை: அதிமுக-பாஜ கூட்டணி கணவன், மனைவி போன்றது என்று பாஜ தேசிய பொது செயலாளர் முரளிதரராவ் கூறினார். தமிழக பாஜ சார்பில் சென்னை தி.நகரில் தென் இந்தியாவின் எதிர்கால அரசியல் என்ற தலைப்பில் கலந்துரையாடல் கூட்டம் நேற்று நடந்தது. கூட்டத்துக்கு துணை தலைவர் அரசகுமார், சென்னை கோட்ட பொறுப்பாளர் சக்ரவர்த்தி, இளைஞர் அணி மாநில தலைவர் வினோஜ் பி.செல்வம் முன்னிலை வகித்தனர். பாஜ நிர்வாகிகள் நிர்மல்குமார், ஏ.என்.எஸ்.பிரசாத் முன்னிலை வகித்தனர்.
இதில் பாஜ தேசிய பொதுச்செயலாளர் முரளிதரராவ், நிர்வாகிகள் கேட்ட கேள்விகளுக்கு பதில் அளித்தார். தொடர்ந்து, அவர் அளித்த பேட்டி: இந்தியா, இலங்கை நாடுகளின் மீனவர்கள் பிரச்னையை சரி செய்ய மத்திய அரசு தீவிர நடவடிக்கை எடுத்து வருகிறது. இலங்கையில் வாழும் தமிழக மக்களின் நலனுக்காக மத்திய அரசு உறுதி பூண்டுள்ளது. இதனால் இலங்கையில் வாழும் தமிழர்களின் எதிர்காலம் சிறப்பாக இருக்கும். தமிழகம் முக்கியமான மாநிலம் மட்டுமல்ல, சவாலான மாநிலமும்கூடதான். தற்போது வரையிலும் அதிமுகவுடன் கூட்டணி தொடருகிறது. அதிமுக-பாஜ கூட்டணி கணவன், மனைவி போன்றது. வெளிப்படையாக இப்போது எதுவும் வெளியே சொல்ல முடியாது. தமிழக அரசு சிறப்பாக செயல்படுகிறது. ஜனவரி மாதத்தில் தமிழகத்தில் பல்வேறு அரசியல் மாற்றங்கள் நிகழும். தமிழக பாஜவுக்கு 2 வார காலத்துக்குள் தேர்தல் நடத்தி தலைவரை தேர்ந்தெடுப்போம். இவ்வாறு அவர் கூறினார்.