×

திருவண்ணாமலை பால் உற்பத்தியாளர் சங்க தலைவராக அக்ரி கிருஷ்ணமூர்த்தி நியமிக்கப்பட்டது செல்லாது: சென்னை உயர்நீதிமன்றம் தீர்ப்பு

சென்னை: திருவண்ணாமலை பால் உற்பத்தியாளர் சங்க தலைவராக அக்ரி கிருஷ்ணமூர்த்தி நியமிக்கப்பட்டது செல்லாது என சென்னை உயர்நீதிமன்றம் அதிரடி தீர்ப்பு வழங்கியுள்ளது. திருவண்ணாமலை மாவட்டத்தில் உள்ள 522 பால் உற்பத்தியாளர்கள் சங்கங்கள் மூலம் தினமும் 3 லட்சம் லிட்டர் பால் உற்பத்தி செய்து ஆவின் நிறுவனத்திற்கு வழங்கப்படுகிறது. இந்நிலையில், திருவண்ணாமலை மாவட்ட சங்க துணைப்பதிவாளர்  அம்மாவட்ட பால் உற்பத்தியாளர் சங்க தலைவராக முன்னாள் அமைச்சர் அக்ரி கிருஷ்ணமூர்த்தியை தேர்ந்தெடுத்திருப்பதாக கடந்த ஆகஸ்ட் 28ம் தேதி அறிவித்தார்.

அதில், திருவண்ணாமலை மாவட்டத்தில் உள்ள இலத்தூர் பால் உற்பத்தியாளர்கள் சங்கத்தை அக்ரி கிருஷ்ணமூர்த்தி நடத்தி வருவதாகவும் அதன் காரணமாக அவருக்கு இந்த பதவி வழங்கி இருப்பதாகவும் குறிப்பிடப்பட்டிருந்தது. இதையடுத்து, அக்ரி கிருஷ்ணமூர்த்திக்கு தலைவர் பதவி கொடுத்த உத்தரவை ரத்து செய்யக்கோரி திருவண்ணாமலை மாவட்டத்தில் உள்ள வனபுரம் பால் உற்பத்தியாளர்கள் கூட்டுறவு சங்க தலைவர் பச்சமுத்து, உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார்.

இதுகுறித்து அவர் தாக்கல் செய்த மனுவில், தேர்தல் நடத்தாமல் அக்ரி கிருஷ்ணமூர்த்திக்கு மாவட்ட பால் உற்பத்தியாளர் சங்க தலைவர் பதவியை கொடுத்திருப்பது கூட்டுறவு சங்க விதிகளுக்கு எதிரானது. அக்ரி கிருஷ்ணமூர்த்தியை தலைவராக தேர்ந்தெடுக்க தகுதியாக கூறப்படும் இலத்தூர் பால் உற்பத்தியாளர் சங்கம் தற்போது வரை ஒரு லிட்டர் பாலை கூட ஆவின் நிறுவனத்திற்கு வழங்கவில்லை. விதிகளின்படி 90 நாட்களில் 120 லிட்டர் பாலை கூட்டுறவுக்கு வழங்க வேண்டும் என்ற நிபந்தனையை அக்ரி கிருஷ்ணமூர்த்தி நடத்தி வரும் சங்கம் நிறைவேற்றி இருப்பதற்கான ஆவணங்களும் இல்லை.

எனவே, அக்ரி கிருஷ்ணமூர்த்தியை திருவண்ணாமலை மாவட்ட பால் உற்பத்தியாளர் சங்க தலைவராக தேர்ந்தெடுத்ததை ரத்து செய்து உத்தரவிட வேண்டும், என குறிப்பிட்டிருந்தார். இந்த வழக்கில் இருதரப்பு வாதங்களும் முடிவடைந்த நிலையில், தீர்ப்பு ஒத்திவைக்கப்பட்டு இருந்தது. இந்நிலையில், இந்த வழக்கில் நீதிமன்றம் இன்று தீர்ப்பு வழங்கியுள்ளது. அதில் கூட்டுறவு சங்கத்தின் விதிகளை பின்பற்றாமல் அக்ரி கிருஷ்ண மூர்த்தி நியமிக்கப்பட்டது செல்லாது. தேர்தல் நடத்தாமல் தலைவராக அக்ரி கிருஷ்ணமூர்த்தியை தேர்ந்தெடுத்தது சங்க விதிகளுக்கு எதிரானது என்று உயர்நீதிமன்றம் தெரிவித்துள்ளது.

Tags : president ,Agri Krishnamoorthy ,Chennai High Court ,Thiruvannamalai Dairy Producers Association , Thiruvannamalai, Milk Producers Association, Agri Krishnamurthy, Chennai High Court
× RELATED எடை குறைப்பு சிகிச்சையில் இளைஞர் பலி!...