புதுடெல்லி: கூடங்குளம் அணுமின் நிலையத்திற்கு எதிராக போராடியவர்கள் மீது போடப்பட்ட வழக்குகளை வாபஸ் பெற வேண்டுமென மக்களவையில் திமுக வலியுறுத்தியது. மக்களவையில் நேற்று இவ்விவகாரம் தொடர்பாக பேசிய திமுக எம்பி டி.ஆர்.பாலு, ‘‘கூடங்குளம் அணு மின் நிலையம் அமைக்க எதிர்ப்பு தெரிவித்து சுமார் 10,000 பேர் 30-40 நாட்களுக்கு அமைதியான முறையில் போராட்டம் நடத்தினர். ஆனால், மத்திய, மாநில அரசுகள் சுமார் 9,000 பேர் மீது கிரிமினல் வழக்கு பதிந்துள்ளது. 8,956 பேர் தேச துரோக வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. இதனால் இன்று வரை சம்மந்தப்பட்ட மக்கள் பாதிக்கப்பட்டுள்ளனர். எனவே, கூடங்குளம் பகுதியில் அமைதியையும், சகஜ நிலையையும் கொண்டு வரும் நோக்கில், பாதிக்கப்பட்ட மக்கள் மீதான வழக்குகள் திரும்பப் பெற வேண்டும். கைது செய்யப்பட்ட நபர்களை மத்திய அரசு விடுவிக்க வேண்டும்’’ என்றார்.