நெல்லை: காதல் திருமணம் செய்த நாங்குநேரி வாலிபரின் தலையை துண்டித்து கொலை செய்து உடலை தண்டவாளத்தில் வீசிய சம்பவம் நெல்லையில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. நெல்லை மாவட்டம், நாங்குநேரி அருகே மறுகால்குறிச்சி மாடன் கோயில் தெருவைச் சேர்ந்தவர் அருணாச்சலம்(50). கூலித் தொழிலாளி. இவரது மனைவி சண்முகத்தாய்(45). இவர்களுக்கு 3 மகன்கள். இதில் 2வது மகன் நம்பிராஜன்(21), பால்பண்ணையில் வேலை செய்து வந்தார். இவர் மீது அடிதடி, கொலை முயற்சி, வெட்டு குத்து, தீ வைத்தல் உள்ளிட்ட பல்வேறு வழக்குகள் உள்ளன. இதே ஊரில் கீழத்தெருவைச் சேர்ந்த தங்கப்பாண்டி மகள் வான்மதி(18)யும், நம்பிராஜனும் காதலித்து வந்தனர். ஒரே சமுதாயத்தை சேர்ந்தவர்கள் என்ற போதிலும் வான்மதியின் பெற்றோர், இவர்களின் காதலுக்கு கடும் எதிர்ப்பு தெரிவித்தனர். நம்பிராஜனுடன் பழக தடை விதித்தனர். இதனால் காதல் ஜோடி ஊரை விட்டு வெளியேறி, திருமணம் செய்து கொண்டு, நெல்லை டவுன் வயல் தெருவில் வாடகை வீட்டில் வசித்தது. இவர்கள் காதல் திருமணத்திற்கு நம்பிராஜன் தந்தை அருணாச்சலம் பண உதவி செய்துள்ளார்.
இந்நிலையில் நேற்று முன்தினம் இரவு நம்பிராஜன் வீட்டிற்கு அவரது நண்பர் முத்துப்பாண்டி சென்று, மது குடிக்க பைக்கில் அழைத்து சென்றுள்ளார். இருவரும் குறுக்குத்துறை ரயில்வே கேட் பகுதியில் பைக்கை நிறுத்திவிட்டு, மறைவான இடத்தில் மது அருந்தியுள்ளனர். அப்போது அங்கு புதரில் பதுங்கியிருந்த கும்பல், பாய்ந்து வந்து நம்பிராஜனை சரமாரியாக வெட்டியது. இதில் அவரது தலை துண்டானது. பின்னர் அவரது உடலை தண்டவாளத்தில் போட்டு விட்டு அந்த கும்பல் தப்பியது.இரவாகியும் கணவர் வீடு திரும்பாததால் வான்மதி, மாமனார் அருணாச்சலத்திடம் போனில் தெரிவித்துள்ளார். டவுன் போலீசிலும் புகார் அளித்தார். போலீசார் நம்பிராஜனை தேடி வந்தனர்.நள்ளிரவில் குறுக்குத்துறை ரயில்வே தண்டவாளம் அருகே ஒரு பைக் கேட்பாரற்று நின்றதால் அப்பகுதியில் தேடியபோது நம்பிராஜன் உடல் தலை துண்டிக்கப்பட்ட நிலையில் கிடந்தது தெரிய வந்தது. கொலையை மறைக்க உடலை தண்டவாளத்தில் வீசிச் சென்றது தெரிய வந்தது. உடல் கிடந்தது தண்டவாளம் என்பதால் ரயில்வே போலீசாரும் விசாரணையில் இறங்கினர். எனினும் டவுன் போலீசார் முறைப்படி வழக்குப்பதிவு செய்து, வான்மதியின் அண்ணன் செல்லச்சாமி உள்பட 4 பேரை தேடி வருகின்றனர். மது குடிகக் அழைத்து சென்ற முத்துப்பாண்டியிடமும் விசாரணை நடக்கிறது. காதல் திருமணம் செய்த வாலிபர் தலை துண்டித்து கொலை செய்யப்பட்ட சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
கொலையை மறைக்க நாடகம்
நம்பிராஜனை கொலை செய்த கும்பல் அவரது உடலை அருகில் உள்ள தண்டவாளத்திற்கு தரதரவென்று இழுத்துச் சென்று போட்டுள்ளது. சிறிது நேரத்தில் அந்த வழியாக சென்ற பாலருவி எக்ஸ்பிரஸ் அவரது உடல் மீது ஏறிச் சென்றுள்ளது.நம்பிராஜன் ரயில் மோதி தலை துண்டித்து இறந்ததாக போலீசார் கருதும் வகையில் இந்த நாடகத்தை நடத்தியுள்ளனர். இருப்பினும் போலீசார் உடலில் இருந்த வெட்டுக்காயங்கள் காரணமாக இது கொலை என முடிவு செய்து ரயில்வே போலீசாரிடம் இருந்து வழக்கை, உள்ளூர் போலீசார் எடுத்து கொண்டனர்.