பெங்களூரு: கர்நாடகாவில் கட்சி தாவல் தடை சட்டத்தின் கீழ் எம்எல்ஏ பதவி பறிக்கப்பட்ட 17 எம்எல்ஏ.க்கள் மீது தேசத் துரோக வழக்கு பதிவு செய்யக்கோரி தாக்கல் செய்த மனு மீது விசாரணை முடிந்து டிசம்பர் 30ம் தேதி தீர்ப்பு ஒத்திவைக்கப்பட்டது.
பெங்களூருவை சேர்ந்த வக்கீல் பாலகிருஷ்ணன் கடந்த திங்கட்கிழமை பெங்களூரு சிட்டி சிவில் நீதிமன்ற வளாகத்தில் உள்ள 52வது ேநஷனல் இன்வெஸ்ட்டிகேஷன் ஏஜென்சி (என்ஐஏ) நீதிமன்றத்தில் தாக்கல் செய்த மனுவில், கடந்த 2018ம் ஆண்டு நடைபெற்ற சட்ட பேரவை தேர்தலில் வெற்றி பெற்ற காங்கிரஸ் மஜத எம்எல்ஏக்கள் 17 பேர் தங்கள் பதவியை ராஜினாமா செய்தனர்.பாஜ மேற்கொண்ட ஆபரேஷன் தாமரை திட்டத்தில் அவர்கள் ராஜினாமா செய்திருப்பது தெளிவாக தெரிகிறது. தேர்தல் ஜனநாயகத்தின்படி ஐந்தாண்டுகள் மக்கள் ேசவை செய்வதற்காக தான் மக்கள் வாக்களிக்கிறார்கள். அந்த மக்களின் உணர்வுக்கு மதிப்பளிக்காமல் பண ஆசைக்காக தங்கள் எம்எல்ஏ பதவியை ராஜினாமா செய்துள்ளதின் மூலம் தேச துரோகம் செய்துள்ளனர்.
அவர்கள் மீது தேசதுரோக வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்த வேண்டும். மேலும் பல கோடி ரூபாய் கொடுத்து எம்எல்ஏக்களை விலைக்கு வாங்கிய பாஜவுக்கு பணம் எங்கிருந்து வந்தது என்பது குறித்தும் விசாரணை நடத்த வேண்டும் என்று கூறியிருந்தார். வக்கீல் பாலகிருஷ்ணன் தாக்கல் செய்திருந்த மனு நேற்று விசாரணைக்கு வந்தது. மனுதாரர் சார்பில் ஆஜரான வக்கீல் தங்கள் தரப்பு நியாயத்தை எடுத்துரைத்து வாதம் செய்தார். நாட்டில் நடக்கும் தேர்தலுக்கு மக்கள் வரி பணத்தில் இருந்து தான் செலவு செய்யப்படுகிறது. மக்கள் பிரதிநிதிகள் சுயநலமாக நடந்து கொள்வதால் இடைத்தேர்தல் நடப்பதின் மூலம் அடிக்கடி வரிப்பணம் வீணாகிறது. அதை விட மக்கள் பிரதிநிதிகள் தங்கள் கடமையில் இருந்து தவறியுள்ளனர். ஆகவே அவர்கள் மீது தேசதுரோக வழக்கு பதிவு செய்து விசாரணைக்கு உத்தரவிட வேண்டும் என்றார். வாதங்களை கேட்ட நீதிபதி இது தொடர்பான தீர்ப்பை டிசம்பர் 30ம் தேதி வழங்குவதாக கூறி ஒத்தி வைத்தார்.