தென்காசி: கடனாநதி, அடவிநயினார் கோயில் அணை, ராமநதி அணை, கருப்பா நதி உள்ளிட்ட அணைகளில் நீர் திறக்கப்பட்டுள்ளது. முதல்வரின் உத்தரவின் பேரில் மார்ச் 29 வரை 125 நாட்களுக்கு தண்ணீர் திறந்து விடப்படும். நீர்திறப்பின் மூலம் அம்பாசமுத்திரம், தென்காசி ஆகிய பகுதிகளில் 32,458 ஏக்கர் நிலம் பாசன வசதி பெரும். நெல்லை மற்றும் தென்காசி மாவட்ட அணைகளில் நீர்மட்டம் வேகமாக உயர்ந்து வருவதால் பிசான பருவ சாகுபடியில் விவசாயிகள் தீவிரமாக ஈடுபட்டுள்ளனர். இந்நிலையில் கடனாநதி, அடவிநயினார், ராமநதி மற்றும் கருப்பாநதி நீர்த்தேக்கங்களின் நீர்ப்பிடிப்பு பகுதிகளில் வடகிழக்கு பருவமழை தீவிரமடைந்து அணைகள் முழுக்கொள்ளளவை எட்டியுள்ளது. இவ்வணைகளின் மூலம் பாசனம் பெறும் விவசாயிகள் நடப்பாண்டு பிசான சாகுபடி செய்வதற்காக தண்ணீர் வழங்க கோரிக்கை விடுத்தனர்.
விவசாயப் பெருமக்களின் வேண்டுகோளை ஏற்று, கடனா, அடவிநயினார்கோவில், ராமநதி மற்றும் கருப்பாநதி நீர்த்தேக்கங்களில் இருந்து பிசான சாகுபடிக்கு 26-11-2019 முதல் 29-3-2020 வரை 125 நாட்களுக்கு தண்ணீர் திறந்துவிட முதல்வர் உத்தரவிட்டிருந்தார். அதன் அடிப்படையில் இன்று இந்த நான்கு அணைகளில் இருந்தும் நீர் திறக்கப்பட்டது. இந்த அணைகளின் மூலம் அம்பாசமுத்திரம், சேரன்மகாதேவி, தென்காசி, செங்கோட்டை மற்றும் கடையநல்லூர் வட்டங்களில் உள்ள 32,024.58 ஏக்கர் நேரடி மற்றும் மறைமுகப் பாசன நிலங்கள் பாசன வசதி பெறுகின்றன.