சென்னை: புதுச்சேரி முதல்வர் நாராயணசாமிக்கு முழங்கால் மூட்டு சவ்வு சேதமடைந்துள்ளதால் நடக்கும் போது வலி இருந்து வந்தது. ஏற்கனவே 2 மாதத்துக்கு முன்பு கொடுக்கப்பட்ட வலி நிவாரணிகள், களிம்பு மருந்துகள் வேலை செய்யவில்லை. தொடர்ந்து வாக்கிங் செல்லும் போதும் வலி இருந்தது. இதையடுத்து மருத்துவமனையில் தங்கி சிகிச்சை பெறுமாறு மருத்துவர்கள் அறிவுறுத்தினர். அதன்படி நேற்று சென்னை வடபழனியில் உள்ள சிம்ஸ் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். இது குறித்து மருத்துவமனை நிர்வாகம் வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில், புதுச்சேரி முதல்வர் நாராயணசாமி முழங்கால் மூட்டில் அறுவை சிகிச்சை மேற்கொள்ளப்பட்டது. அவர் நலமுடன் இருக்கிறார். விரைந்து குணமடைந்து ஓரிரு நாட்களில் வீடு திரும்புவார் என தெரிவிக்கப்பட்டுள்ளது.