சென்னை: அதிமுக அடிமைக் கட்சி இல்லை என பொதுக்குழு கூட்டத்தில் முதல்வர் எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார்.
2017 பொதுக்குழு செயற்குழு:
ஜெயலலிதா மறைவுக்கு பிறகு, எடப்பாடி பழனிசாமி, ஓ.பன்னீர்செல்வம் இணைப்புக்கு பின் கடந்த 2017 செப்டம்பர் 12-ம் தேதி அதிமுக பொதுக்குழு கூடியது. அப்போது நடைபெற்ற பொதுக்குழுவில், சசிகலாவுக்கு வழங்கப்பட்ட பொதுச்செயலாளர் பதவி ரத்து செய்யப்பட்டதுடன், சசிகலாவால் நியமிக்கப்பட்ட டி.டி.வி.தினகரன் பதவி உள்ளிட்ட சிலரின் அதிமுக உறுப்பினர் பதவியும் ரத்து செய்யப்பட்டது. பின்னர் அதிமுகவில் இனி பொதுச்செயலாளர் பதவி கிடையாது என்றும், ஒருங்கிணைப்பாளர்கள், இணை ஒருங்கிணைப்பாளர்கள் ஆகியோருக்கே கட்சியை வழிநடத்த முழு அதிகாரம் என்று தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.
அதன்படி அதிமுக ஒருங்கிணைப்பாளராக ஓ.பன்னீர்செல்வமும், இணை ஒருங்கிணைப்பாளராக எடப்பாடி பழனிசாமியும், துணை ஒருங்கிணைப்பாளர்களாக கே.பி.முனுசாமி, வைத்திலிங்கம் ஆகியோர் பொதுக்குழு மூலம் தேர்வு செய்யப்பட்டனர். கஜா புயல் காரணமாக 2018ம் ஆண்டு அதிமுக பொதுக்குழு செயற்குழு கூட்டம் நடைபெறவில்லை.
23 தீர்மானங்கள் நிறைவேற்றம்:
இந்த சூழ்நிலையில் அதிமுக பொதுக்குழு வருகிற 24ம் தேதி (இன்று) நடைபெறும் என்று அதிமுக தலைமை கழகம் சார்பில் கடந்த 7-ம் தேதி அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டது. அதன்படி, அதிமுக செயற்குழு மற்றும் பொதுக்குழு கூட்டம் சென்னை, வானகரத்தில் உள்ள ஸ்ரீவாரு வெங்கடாசலபதி பேலஸ் மண்டபத்தில் அவைத்தலைவர் மதுசூதனன் தலைமையில் தொடங்கியது. தொடந்து பொதுக்குவில் 23 தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டது.
பொதுக்குழுவில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள்:
* நீட் தேர்வில் இருந்து தமிழகத்திற்கு விலக்கு.
* இலங்கையில் வாழும் தமிழர்களுக்கு சமஉரிமை கிடைக்க மத்திய அரசு உறுதியளிக்க வேண்டும்.
* மருத்துவ படிப்புகளில் பிற்பட்ட வகுப்பினருக்கு இடஒதுக்கீட்டை உறுதி செய்யுமாறு மத்திய அரசை வலியுறுத்தல்
* தமிழக அரசுக்கு தரவேண்டிய பெரும்தொகையை மத்திய அரசு விரைவாக வழங்க வேண்டும்.
* கீழடி அகழ்வாராய்ச்சியின் மூலம் தமிழர்களின் தொன்மையை உலகறிய செய்த தமிழக அரசுக்கு பாராட்டு
* காவிரி, கோதாவரி இணைப்பு திட்டத்தை விரைந்து நிறைவேற்ற வேண்டும் என மத்திய அரசுக்கு கோரிக்கை
* அதிமுகவின் வெற்றிக்கு உறுதுணையாக இருந்த கூட்டணி கட்சிகளுக்கு நன்றி தெரிவித்து தீர்மானம்
* தொழில் முதலீடுகளை ஈர்க்க உலக முதலீட்டாளர்கள் மாநாடு, வெளிநாட்டு பயணம் ஆகியவற்றிற்காக தமிழக அரசுக்கு பாராட்டு
* தமிழ்நாடு நாள் கொண்டாடிய தமிழக அரசுக்கு பாராட்டு தெரிவித்து தீர்மானம்
* சென்ட்ரல் ரயில் நிலையத்திற்கு எம்.ஜி.ஆர் பெயர் சூட்டியதற்கு மத்திய அரசுக்கு நன்றி
* விக்கிரவாண்டி, நாங்குநேரி இடைத்தேர்தல் வெற்றிக்கு ஈ.பி.எஸ் மற்றும் ஓ.பி.எஸ்சுக்கு பாராட்டு
* மதுரையில் எய்ம்ஸ் மருத்துவமனைக்கு அடிக்கல் நாட்டிய பிரதமர் மோடிக்கு நன்றி
* பிளாஸ்டிக் ஒழிப்பில் முன்னோடி மாநிலமாக திகழும் தமிழக அரசுக்கு பாராட்டு
* இருமொழிக் கொள்கை, மாநில சுயாட்சி, அனைவருக்கும் வாய்ப்பளிக்கும் கல்விமுறையில் அதிமுக அரசு பயணிக்கும் என்பதில் உறுதி
* உள்ளாட்சி தேர்தலில் அதிமுக வெற்றிக்கு அனைவரும் உழைத்திட வேண்டும் என தீர்மானம்
முதல்வர் எடப்பாடி பழனிசாமி பேச்சு:
இந்நிலையில், அதிமுக செயற்குழு மற்றும் பொதுக்குழு கூட்டத்தில் பேசிய முதல்வர் எடப்பாடி பழனிசாமி, அதிமுக அடிமைக் கட்சி இல்லை என்று தெரிவித்தார். தமிழக அரசின் திட்டங்களை நிறைவேற்றவே மத்திய பாஜக அரசுடன் இணக்கமாக செயல்படுகிறோம். அதிமுக தொண்டர்களின் ஆதரவோடு முதல்வர் நிலைக்கு உயர்ந்துள்ளேன். கடந்த 3 ஆண்டுகளில் அதிக போராட்டங்களை சந்தித்த ஆட்சி அதிமுக ஆட்சி என்று கூறினார்.
தமிழகத்தில் 6 மருத்துவ கல்லூரிகள் தொடங்க அனுமதியளித்த மத்திய அரசுக்கு பிரதமர் மோடிக்கு நன்றி தெரிவித்தார். மேலும் 3 புதிய மருத்துவக் கல்லூரிகளுக்கு மத்திய அரசிடம் அனுமதி கோரியுள்ளோம் மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதா நினைவிட கட்டுமான பணிகள் பிப்ரவரி மாதத்தில் முடிவடையும் என்றார்.
நாடாளுமன்ற தேர்தலையும், சட்டமன்ற இடைத்தேர்தலையும் பிரித்து பார்த்து மக்கள் வாக்களித்துள்ளனர். தேர்தலுக்கு 20 நாட்களுக்கு முன் கூட்டணி அமைத்தாலும், அது வலுவான கூட்டணியாக இருந்தது என்றார். கூட்டணியை ஒருங்கிணைப்பதில் இடைவெளி இருந்ததால் நாடாளுமன்ற தேர்தலில் ஒரு இடத்தில் மட்டுமே வெற்றி பெற்றோம்.
கட்சியே தொடங்காமல் சிலர் பேசுகின்றனர. டிடிவி தினகரன் மற்றும் குடும்பத்தினர் அதிமுகவை எவ்வளவு பாடாய்படுத்தினார்கள் என்பது அனைவருக்கும் தெரியும் என்றார். யார் கட்சி துவங்கினாலும் எங்களுக்கு கவலையில்லை, உயிரோட்டம் உள்ள கட்சி அதிமுக மட்டும்தான். டிடிவி தினகரன் துரோகிகளை அழிப்பதுதான் நோக்கம் என்கிறார்.அவர்தான் துரோகி. கடலில் போட்ட உப்பை போல தினகரன் கட்சி கரைந்து கொண்டிருக்கிறது என்றார்.