சென்னை: மத்திய அரசின் ‘பாஸ்ட் டேக்’ திட்டத்திற்குள், அரசு பஸ்களை கொண்டுவருவதற்கு அதிகாரிகள் தீவிரம் காட்டி வருகின்றனர். தேசிய நெடுஞ்சாலைகளில் ஏராளமான சுங்கச்சாவடிகள் உள்ளன. இவற்றை கடந்து செல்வதற்கு வாகன ஓட்டிகள் மணிக்கணக்கில் காத்திருக்க வேண்டிய நிலை உள்ளது. குறிப்பாக போக்குவரத்து நெரிசல் மிகுந்த இடங்களில் உள்ள சுங்கச்சாவடிகளில் இப்பிரச்னை வாகன ஓட்டிகளுக்கு மிகப்ெபரிய தலைவலியை ஏற்படுத்தி வருகிறது. எனவே இதற்கு முற்றுப்புள்ளி வைக்க வேண்டும் என்ற கோரிக்கை எழுந்தது. இதையடுத்து நாடுமுழுவதும் அனைத்து இடங்களிலும் தானியங்கி சுங்கக்கட்டணம் வசூலிக்கும் திட்டத்தை (பாஸ்ட் டேக்) டிசம்பர் 1ம் தேதி அமல்படுத்த திட்டமிடப்பட்டுள்ளது. இந்தமுறையை பயன்படுத்துவோர் எந்த இடத்திலும், தங்களது வாகனத்தை நிறுத்தி கட்டணம் செலுத்த வேண்டிய அவசியம் இருக்காது. இதற்காக சுங்கச்சாவடிகளில் பிரத்தியேகமாக ‘பாஸ்ட் டேக்’ என்ற வழி உருவாக்கப்பட்டுள்ளது.
இதில், செல்வதற்கு ‘பாஸ்ட் டேக்’ என்ற கார்டை பயன்படுத்த வேண்டும். இந்தகார்டானது அனைத்து சுங்கச்சாவடி, சில ஏஜென்ஸிகள் மூலமாக விற்பனைக்கு கொண்டுவரப்பட்டுள்ளது. இங்கு பெற்று ஆக்டிவேட் செய்து கொள்ளலாம். ஆன்லைனிலும் இதற்கான விண்ணப்பம் உள்ளது. அதையும் பதிவிறக்கம் செய்து பயன்படுத்திக்கொள்ள முடியும். பிறகு வங்கியின் மூலமாக முன்னரே பணம் செலுத்தி ரீசார்ஜ் செய்து கொள்ள வேண்டும். இதை ஆக்டிவேட் செய்வதற்கு வாகனத்தின் ஆர்சி புக், உரிமையாளரின் போட்டோ, லைசென்ஸ், பான் கார்டு, விபரங்கள் கேஓய்சி படிவமாக இருக்க வேண்டும். பாஸ்ட் டேக் வாடிக்கையாளர்கள் டெபிட் கார்டு, கிரெடிட் கார்டு, நெட் பாங்கிங் உள்ளிட்ட ஆன்லைன் சேவைகள் மூலமாகவும் பணத்தை செலுத்தி ரீசார்ஜ் செய்து கொள்ளலாம்.
பிறகு அந்த கார்டை நமது வாகனத்தில் கண்ணாடியில் பொருத்திக் கொள்ள வேண்டும். இவ்வாறு ரீசார்ஜ் செய்யப்பட்ட கார், எந்த சுங்கச்சாவடியில் நுழைந்தாலும் அப்போது, அங்கு ஒரு இயந்திரம் பொருத்தப்பட்டிருக்கும்.
அந்த இயந்திரம் கண் இணைக்கும் ெநாடியில் காரின் வருகையை கண்டறிந்து பதிவு செய்து விடும். பிறகு நாம் முன்னரே ரீசார்ஜ் செய்து வைத்திருந்த பணத்தில் இருந்து, அந்த சுங்கச்சாவடியை நாம் பயன்படுத்தியதற்கான கட்டணம் கழிக்கப்பட்டு விடும்.
பிறகு அங்கு அமைக்கப்பட்டிரும் தடுப்பு கம்பியும் தானாகவே திறந்து கொள்ளும். முன்னதாக இந்த கார்டை பயன்படுத்தும் வாகன ஓட்டி, சுங்கச்சாவடி உள்ள இடத்திலிருந்து 10 மீட்டர் தூரத்திற்கு முன்பிருந்து 25-30 கி.மீ வேகத்தில் வாகனத்தை இயக்க வேண்டும். இந்தமுறையை பயன்படுத்துவதால், சுங்கச்சாவடியில் பணம் செலுத்துவதற்கு வாகனத்தை நீண்ட நேரம் நிறுத்தாமல், வாகன ஓட்டியால் பயணிக்க முடியும். இந்நிலையில் இத்திட்டம் குறித்து போக்குவரத்துத்துறை அதிகாரிகள் விழிப்புணர்வு ஏற்படுத்தியதையடுத்து, பலரும் சம்மந்தப்பட்ட முறைக்கு மாறிவிட்டனர். தற்போது அரசு பஸ்களிலும் இத்திட்டத்தை செயல்படுத்துவதில் அதிகாரிகள் தீவிரம் காட்டி வருகின்றனர்.
இதுகுறித்து போக்குவரத்துத்துறை அதிகாரி ஒருவர் கூறுகையில், ‘தனியார் போக்குவரத்து வாகனங்களில் ஏராளமானவை ‘பாஸ்ட் டேக்’ முறைக்கு வந்துவிட்டது. அரசு பஸ்கள் இன்னும் வரவில்லை. இதுகுறித்து சுற்றறிக்கை அனுப்பப்பட்டுள்ளது. விரைவில் ெகாண்டுவருவதற்கான முயற்சிகளில் தீவிரம் காட்டி வருகிறோம்’ என்றார்.