சென்னை: கோரிக்கைகளை வலியுறுத்தி போராட்டம் நடத்திய டாக்டர்களை அரசு பழிவாங்கக்கூடாது என்று சென்னை உயர் நீதிமன்றம் கருத்து தெரிவித்துள்ளது. தமிழகத்தில் கடந்த மாதம் 25ம் ேததி முதல் பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி அரசு டாக்டர்கள் காலவரையற்ற வேலை நிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டனர். இதனால், அவர்கள் மீது ஒழுங்கு நடவடிக்கை எடுப்பதற்கான சார்ஜ் மெமோவையும் வழங்கியது.
இதையடுத்து, டாக்டர்கள் உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தனர். இந்த வழக்கை நீதிபதி தண்டபாணி விசாரித்தார். இந்நிலையில்,டாக்டர்கள் தொடர்ந்த வழக்குகள் அனைத்தும் நீதிபதி எம்.தண்டபாணி முன்பு நேற்று மீண்டும் விசாரணைக்கு வந்தது. அப்போது, கூடுதல் அட்வகேட் ஜெனரல் எஸ்.ஆர்.ராஜகோபால் ஆஜராகி, மாற்றப்பட்ட இடத்தில் பதவி ஏற்கவேண்டும் என்று உயர் நீதிமன்றம் உத்தரவிட்டும் சில டாக்டர்கள் இன்னும் பணியில் சேரவில்லை என்றார். மனுதாரர்கள் சார்பில் ஆஜரான மூத்த வக்கீல்கள் ஆர். சிங்காரவேலன், என்.ஜி.ஆர்.பிரசாத் ஆகியோர், இடமாற்றம் செய்யப்பட்ட 146 டாக்டர்களில் 145 டாக்டர்கள் பதவி ஏற்று விட்டனர். பாலகிருஷ்ணன் என்பவர் மருத்துவ விடுப்பில் சென்றுள்ளார். மனுதாரர்கள் டாக்டர்கள், அவர்களை வேறு விதமாக அரசு நடத்துகிறது வேதனையான விஷயம் என்று வாதிட்டனர்.
அதற்கு நீதிபதி, அரசு என்பது எல்லாரும் பொதுவானது. யாரையும் பழிவாங்க நினைக்கக்கூடாது. அனைவரையும் குழந்தைகளாக நினைக்கவேண்டும். குறும்பு செய்யும் குழந்தைகளும் இருப்பார்கள், அமைதியான குழந்தைகளும் இருப்பார்கள். எப்படி குறும்பு செய்யும் குழந்தைகளை தாய் செல்லம் கொடுத்து நல்வழிப்படுத்தி வளர்ப்பாளோ அதுபோலதான் அரசும் செயல்படவேண்டும். மனுதாரர்கள், தங்கள் குழந்தைகளை தற்போது உள்ள இடத்தில் பள்ளிகளில் சேர்த்துள்ள நிலையில் தொலைதூர மாவட்டங்களுக்கு இடமாற்றம் செய்தால் அவர்கள் என்ன செய்வார்கள். இதுபோன்ற பழிவாங்கும் செயல்களில் அரசு ஈடுபடக்கூடாது. நோயாளிகள் உயிருக்கு போராடிக் கொண்டிருக்கும்போது, டாக்டர்கள் சாலையில் உட்கார்ந்து போராட்டத்தில் ஈடுபடுவார்களா? மனித உயிர் தான் முக்கியம். நோயாளிகளின் உயிரை காப்பாற்றவேண்டிய அந்த முக்கியமான நேரத்தில், இதுபோல போராட்டத்தில் டாக்டர் ஈடுபடலாமா என்று கருத்து தெரிவித்து இந்த வழக்கில் பதில் தருமாறு அரசுக்கு உத்தரவிட்டு விசாரணையை வரும் 26ம் தேதிக்குத் தள்ளிவைத்தார்.