×

விவசாயிகளை ஏமாற்றி நிலத்தை பறிக்கும் தமிழக அரசு எட்டு வழிச்சாலை திட்டத்தால் 10 ஆயிரம் விவசாய குடும்பங்கள் பாதிப்பு

* எட்டு வழிச்சாலை எதிர்ப்பு இயக்கம் குற்றச்சாட்டு

சென்னை: எட்டு வழிச்சாலை திட்டம் எதிர்ப்பு இயக்க ஒருங்கிணைப்பாளர் அருள் ஆறுமுகம் சென்னையில் நிருபர்களிடம் கூறியதாவது:  சேலம், மாவட்டம் கருப்பூரில் கடந்த ஜூலை 22ம் தேதி நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழாவில் முதல்வர் கலந்து கொண்டார். விழாவில் எட்டு வழிச்சாலை வேண்டும் என்று விவசாயிகள் ஒரு சிலரை அழைத்து வந்து மனு அளிக்க வைத்தனர். அதில் ராமலிங்கபுரத்தை சேர்ந்த விவசாயி முருகேசன், நிலம் கொடுப்பதாக மனு அளித்தார். ஆனால் அவர் நிலத்தை தர விருப்பம் இல்லை என்று தெரிவித்துள்ளார். மேலும், அதிகாரிகள் தன்னை ஏமாற்றி அழைத்து சென்றதாகவும் கூறியுள்ளார்.  எட்டு வழிச்சாலை திட்டத்திற்கு விவசாயிகள் ெதாடர்ந்து எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர். ஆனால், முதல்வர் 99 சதவீதம் பேர் இடம் தர தயாராக இருப்பதாக பொய் சொல்லி வருகிறார். உண்மையில் 99 சதவீதம் பேர் எதிர்ப்பு தெரிவிக்கின்றனர். 1 சதவீதம்தான் நிலம் தர முன்வந்துள்ளனர். அவர்களும் அதிமுகவை சேர்ந்தவர்கள்.

இந்த திட்டத்துக்கு எதிர்ப்பு தெரிவித்தவர்களை முதல்வரிடம் மனு அளிக்க விடாமல் தடுக்கின்றனர். ஆனால், நிலம் தருவதாக இருந்தால் உடனே முதல்வர் சந்திக்கிறார்.   இந்த திட்டம் நிறைவேறினால் சாலை விபத்துகள் குறையும் என்று முதல்வர் கூறுகிறார். ஏற்கனவே சென்னையில் இருந்து சேலத்துக்கு 4 சாலைகள் இருக்கிறது. இந்த சாலையை விரிவுபடுத்தினால் போதும். புதிதாக ரூ.10 ஆயிரம் கோடியில் சாலை அமைப்பது வீண் செலவுதான். இந்த சாலை அமைப்பதால் 10 ஆயிரம் விவசாய குடும்பங்கள் பாதிக்கப்படுகின்றனர். கல்வராயன் மலை, தீர்க்கமலை, கஞ்சமலை உட்பட 7 மலைகள் பாதிக்கப்படும். 7 மலையின் கனிமவளத்தை கொள்ளையடிக்கத்தான் இந்த மலையை ஒட்டி சாலை அமைக்கப்படுகிறது. அரூரில் இருந்து சேலம் செல்லும் வகையில் முதல்வருக்கு சொந்தமான மில் உள்ளது அந்த மில் பாதிக்காத வகையில் சாலை அமைக்கின்றனர். ஆனால் விவசாய நிலங்களை அழித்து சாலை அமைக்கின்றனர். இவ்வாறு அவர் கூறினார்.

நிலம் கொடுக்க வந்ததாக
விவசாயி பேட்டி தந்தது ஏன்?
பரபரப்பு தகவல்

எட்டு வழிச்சாலைக்கு நிலம் தருவதாக கூறிய விவசாயி முருகேசன் இந்த திட்டம் தொடர்பாக பேசிய வீடியோவை எதிர்ப்பு இயக்கத்தினர் வெளியிட்டனர். இந்த வீடியோ 3.45 நிமிடம் ஓடுகிறது. அதில், விவசாயி முருகேசன் கூறுகையில், நிலத்தை எடுப்பாங்களா, இல்லையா என்று விசாரிக்க போன என்னை நிலம் கொடுக்க முன்வந்துள்ளதாக பேட்டி கொடுக்க வைத்து விட்டனர்’ என்றார்.

மற்றொரு விவசாயி கூறும்போது, ‘ஆளும்கட்சிக்காரர்கள் எங்கள் நிலத்தின் சர்வே எண்களை எழுதி நான் நிலம் தர சம்மதம் தெரிவித்ததாக கூறியுள்ளனர். இதேபோன்று பல நபர்களின் சர்வே எண்களையும் ஆளும் கட்சிக்காரர்கள் குறிப்பிட்டு நிலம் தர சம்மதித்த மாதிரி பதிவு செய்துள்ளனர். எனது இடத்தை அவர்கள் இடம் எனக்கூறி மோசடியாக பதிவு செய்துள்ளனர்’ என்றார். இதன் மூலம் எட்டு வழிச்சாலை திட்டத்தை நிறைவேற்ற தமிழக அரசு பல்வேறு வழிகளை கையாண்டு வருகிறது என்பது வெட்டவெளிச்சமாகியுள்ளது.


Tags : farmer families , Ten thousand farmer families ,affected ,eight road scheme
× RELATED ₹621 கோடி மதிப்பீட்டில், 3...