தூத்துக்குடி: திருப்பூர் மாவட்டம், பல்லடத்தைச் சேர்ந்த பெருமாள் மனைவி கவிதா (32). இவர்களுக்கு ஒரு மகன், மகள் உள்ளனர். கடந்த 2017ல் விவாகரத்து பெற்ற கவிதா, தூத்துக்குடி, முத்தையாபுரம் பகுதியில் தனியார் லாரி நிறுவனத்தில் கணக்காளர். 2018ல் தூத்துக்குடி அரசு மருத்துவமனையில் அறிமுகமான எட்வின் (29) என்பவருடன் குமரன் நகரில் வீடு எடுத்து ஒன்றாக வசித்து வந்தார். எட்வின் அங்குள்ள ஐஸ் கம்பெனியில் வேலை பார்த்து வருகிறார். கடந்த 8ம் தேதி கவிதாவும், எட்வினும் தூத்துக்குடி விவேகானந்தர் நகரில் ஒரு வீட்டில் குடியேறினர். பின்னர் எட்வின் தனது தாய்வீட்டிற்கு சென்றார். 9ம் தேதி வந்து பார்த்த போது வீடு உட்புறமாக பூட்டியிருந்ததோடு, வீட்டிலிருந்து துர்நாற்றம் வீசியது. உள்ளே சென்று பார்த்த போது கவிதா கருகிய நிலையில் இறந்து கிடந்தார். காலில் வெட்டு காயம் இருந்தது. புகாரின்படி தாளமுத்துநகர் போலீசார் விசாரணை நடத்தினர். இதில், சம்பவத்தன்று இரவு 10 மணிக்கு தூத்துக்குடி, ஜோதிபாசு நகரைச் சேர்ந்த லோடு ஆட்டோ டிரைவர் கருப்பசாமி (27) என்பவர் கவிதா வீட்டுக்கு வந்து சென்றது தெரியவந்தது. இதையடுத்து அவரை பிடித்து விசாரித்ததில் கவிதாவை கொன்றதை ஒப்புக் கொண்டார். அப்போது அவர் அளித்த வாக்குமூலம் குறித்து போலீசார் கூறியதாவது:
கவிதாவை எனக்கு ஒரு சில மாதங்களுக்கு முன்பே தெரியும். கடந்த 8ம் தேதி இரவு என்னை வீட்டுக்கு வரும்படி அழைத்தார். நானும், அவரும் படுக்கையில் இருந்த போது அவர் செல்போனுக்கு அடிக்கடி பல ஆண்களிடமிருந்து போன் கால்கள் வந்த வண்ணம் இருந்தன. தொடர்ந்து போன் கால்கள் வந்தது உல்லாசத்திற்கு இடையூறாக இருந்ததால் எனக்கு ஆத்திரத்தை ஏற்படுத்தியது. இதனால் எனக்கும், கவிதாவுக்கும் தகராறு ஏற்பட்டது. அப்போது அங்கு கிடந்த கட்டையால் கவிதாவை அடித்தேன். வலியால் துடித்த அவர், இதை போலீசில் சொல்லிவிடுவேன் என மிரட்டினார். இதனால் பயந்து போய் கவிதாவின் கழுத்தை நெரித்து கொன்றேன். பின்னர் அவரது உடலை மண்ணெண்ணெய் ஊற்றி எரித்து விட்டேன். இவ்வாறு அவர் வாக்குமூலத்தில் தெரிவித்ததாக போலீசார் கூறினர். இதையடுத்து அவரை போலீசார் கைது செய்தனர்.