சென்னை: இளம் கலைஞர்களுக்கு கலை நிகழ்ச்சிகள் நடத்த நிதியுதவி அளிக்கப்படும் என்று தமிழ்நாடு இயல், இசை நாடக மன்றத்தின் உறுப்பினர், செயலாளர் தங்கவேலு அறிவித்துள்ளார். இதுகுறித்து வெளியிட்ட அறிவிப்பு: தன்னார்வக் கலை நிறுவனங்களின் வாயிலாக இளம் கலைஞர்களுக்கு வாய்ப்பளிக்கும் திட்டத்தின் கீழ் பரதநாட்டியம், வாய்ப்பாட்டு, கதாகாலட்சேபம் மற்றும் நாதசுரம், தனி வயலின், வீணை, புல்லாங்குழல், ஜலதரங்கம், கோட்டு வாத்தியம், மாண்டலின், கிதார், சாக்சபோன், கிளாரினெட் ஆகிய இசைக்கருவிக் கலைஞர்களுக்கும், பக்கவாத்தியங்களான வயலின், மிருதங்கம், கஞ்சிரா, கடம், முகர்சிங், கொன்னக்கோல் ஆகிய பிரிவுகளை சேர்ந்த கலைஞர்களுக்கும் கலைநிகழ்ச்சிகள் நடத்திட நிதியுதவி வழங்கப்படும்.
2019 நவம்பர் 5ம் தேதியுடன் 16 வயது நிரம்பியவராகவும், 30 வயதுக்குட்பட்டவராகவும், மேடையில் தனித்து நிகழ்ச்சி நடத்தும் அனுபவம் மிக்கவராகவும் இருக்க வேண்டும். விண்ணப்பங்களை www.tneinm.in இணையதளத்திலும் பதிவிறக்கம் செய்யலாம். பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்கள் டிசம்பர் 20ம் தேதி வெள்ளிக்கிழமை மாலை 5.45 மணிக்குள் அளிக்கலாம்.