புதுடில்லி: 5 நீதிபதிகள் கொண்ட சுப்ரீம் கோர்ட் அமர்வு வழங்கிய தீர்ப்பை நாட்டு மக்களுடன் சேர்ந்து நானும் முழு மனதாக வரவேற்கிறேன் என்று பா.ஜ. தலைவர் எல்.கே. அத்வானி தெரிவித்துள்ளார். அயோத்தி வழக்கில் சர்ச்சைக்குரிய நிலம் குறித்து சுப்ரீம் கோர்ட் தலைமை நீதிபதி ரஞ்சன் கோகாய் தலைமையிலான 5 நீதிபதிகள் கொண்ட அமர்வு ஒருமனதான தீர்ப்பாக வழங்கியது. வரலாற்று சிறப்புமிக்க தீர்ப்பில், அந்த நிலம் ஹிந்துக்களுக்கே சொந்தம் எனவும், ராமஜென்ம பூமியில் ராமர் கோயில் கட்டலாம் எனவும் தீர்ப்பு அளிக்கப்பட்டது. மேலும், முஸ்லீம்களுக்கு மசூதி கட்டுவதற்கு 5 ஏக்கர் மாற்று நிலம் வழங்க மத்திய, மாநில அரசுகளுக்கு உத்தரவிடப்பட்டது.
அயோத்தி தீர்ப்பு குறித்து மூத்த பா.ஜ. தலைவர் எல்.கே. அத்வானி கூறுகையில், 5 நீதிபதிகள் கொண்ட சுப்ரீம் கோர்ட் அமர்வு வழங்கிய தீர்ப்பை நாட்டு மக்களுடன் சேர்ந்து நானும் முழு மனதாக வரவேற்கிறேன். சர்வ வல்லமை பொருந்திய கடவுள், அயோத்தி விவகாரத்தில் சிறு பங்களிப்பை நான் செய்வதற்கு வாய்ப்பளித்தது, எனக்கு மகிழ்ச்சி அளிக்கிறது. அயோத்தி தீர்ப்பு, இந்திய சுதந்திரத்திற்கு பின் சிறப்பு வாய்ந்த ஒன்றை, சுப்ரீம் கோர்ட் இன்று தீர்ப்பாக வழங்கி உள்ளது. இவ்வாறு அவர் கூறினார்.