நடிகர் ரஜினிகாந்தை கட்சியில் இணையுமாறு பாஜவில் யாரும் எந்த முயற்சியிலும் ஈடுபடவில்லை: தேசிய பொதுச்செயலாளர் முரளிதர ராவ் பேட்டி

சென்னை: தமிழக பாஜவின் மாநில நிர்வாகிகள், கட்சி தேர்தல் பொறுப்பாளர்கள் ஆலோசனை கூட்டம் சென்னை அமைந்தகரையில் நேற்று நடந்தது. கூட்டத்துக்கு கட்சியின் மாநில துணை தலைவர் எம்.ஆர்.காந்தி தலைமை தாங்கினார். மூத்த தலைவர் இல.கணேசன், முன்னாள் மத்திய அமைச்சர் பொன்.ராதாகிருஷ்ணன், மாநில தேர்தல் பொறுப்பாளர்கள் ராமலிங்கம், திருமலைச்சாமி முன்னிலை வகித்தனர். சிறப்பு விருந்தினராக தேசிய பொதுச் செயலாளர் முரளிதர ராவ் கலந்து கொண்டார். பின்னர் அவர் அளித்த பேட்டி: நடிகர் ரஜினிகாந்த் பாஜவில் இணைவார் என்று ஒருபோதும் நாங்கள் கூறியது இல்லை. அதற்கான முயற்சியில் எந்தவொரு நபரும் ஈடுபடவில்லை. உள்ளாட்சி தேர்தல்தான் எங்கள் இலக்கு. அதற்கான வேலையில் நாங்கள் மும்முரமாக ஈடுபட்டுள்ளோம். திருவள்ளுவர் விஷயத்தை பாஜ உலகளாவிய தத்துவத்தின் அடிப்படையில் அணுகுகிறது என்றார்.

பொறுப்பு தலைவர்களா? கூட்டத்தில் பரபரப்பு

தமிழிசை தெலங்கானா கவர்னராக நியமிக்கப்பட்டதை அடுத்து தமிழக பாஜ தலைவர் இன்னும் நியமிக்கப்படவில்லை. இந்நிலையில்  ஆலோசனை கூட்டம் நடந்தது. தலைவர் இல்லாததால் கட்சியின் மூத்த தலைவர் ஒருவரை தலைமை தாங்க வைப்பதற்காக, துணை தலைவராக உள்ள எம்.ஆர்.காந்திக்கு நிகழ்ச்சிக்கான பொறுப்பு தலைவர் பதவி வழங்கப்பட்டது. அதே நேரத்தில் மேடையில் இல.கணேசன், பொன்.ராதாகிருஷ்ணன், வானதி சீனிவாசன் ஆகியோர் இருந்தனர். மேடையில் இருந்த 4 பேரும் கட்சியின் பொறுப்பு தலைவராக நியமிக்கப்பட்டுள்ளனர் என்று தகவல் பரவியது. சிறிது நேரத்திற்கு பிறகு அப்படி பொறுப்பு தலைவர் யாரும் நியமிக்கப்படவில்லை என்று அறிவிக்கப்பட்டது. அதன் பிறகே அது வதந்தி என்பது தெரியவந்தது.

Related Stories: