*2 ஊழியர்கள் சஸ்பெண்ட்
திருவண்ணாமலை : அக்னி தலமாக விளங்கும் திருவண்ணாமலை அண்ணாமலையார் கோயிலுக்கு தமிழகம் மட்டுமின்றி பல்வேறு மாநிலங்களில் இருந்தும், வெளிநாடுகளில் இருந்தும் தினமும் ஆயிரக்கணக்கான பக்தர்கள் வந்து சுவாமி தரிசனம் செய்கின்றனர். மேலும் கோயிலுக்கு வரும் பக்தர்கள், பொது தரிசனம் மற்றும் கட்டண தரிசனம் வழியாக சுவாமி தரிசனம் செய்ய அனுமதிக்கப்படுகின்றனர். வெளியூர்களில் இருந்து வரும் பக்தர்கள் நீண்ட நேரம் காத்திருந்து சுவாமி தரிசனம் செய்ய முடியாததால் ₹50 தரிசன டிக்கெட் பெற்று விரைவாக சுவாமி தரிசனம் செய்கின்றனர்.
இதற்காக அண்ணாமலையார் கோயில் 3ம் பிரகாரத்தில் சம்பந்த விநாயகர் சன்னதி அருகே உள்ள கவுன்டரில் தரிசன டிக்கெட் வழங்கப்படுகிறது. இங்கு பணிபுரியும் ஊழியர்கள், வேறு பணிக்கு செல்லும்போது தற்காலிக ஊழியர்கள் தரிசன டிக்கெட் வழங்குவது வழக்கம். அதன்படி, கோயில் யானை ருக்கு இறந்துவிட்டதால் அதை பராமரித்து வந்த சிங்காரம், இரவு காவலாளி பிரேம்குமார் ஆகியோர், பக்தர்களுக்கு தரிசன டிக்கெட் வழங்கும் பணியில் ஈடுபடுவார்களாம்.
இந்நிலையில், சில நாட்களுக்கு முன்பு கோயில் இணை ஆணையர் ஞானசேகரன், கோயிலில் பக்தர்கள் செல்லும் வரிசையில் ஆய்வு செய்தார். அப்போது கட்டண தரிசனத்தில் நின்ற பக்தர்கள் சிலரிடம் டிக்கெட் இல்லை. இதுகுறித்து அவர்களிடம் விசாரித்தபோது தரிசனத்திற்காக ₹50 செலுத்தியதாகவும், ஆனால் டிக்கெட் தரவில்லை எனவும் அவர்கள் தெரிவித்துள்ளனர். மேலும், பல்வேறு ஊழியர்கள் மீது புகார்கள் தெரிவித்ததாக கூறப்படுகிறது.
இதுதொடர்பாக ஆணையர் ஞானசேகரன் தொடர்ந்து விசாரணை நடத்தினார்.
விசாரணையில் தொகுப்பூதியத்தில் மணியாற்றும் யானை பராமரிப்பாளர் சிங்காரம், இரவு காவலர் பிரேம்குமார் ஆகியோர் சில பக்தர்களுக்கு மட்டும் தரிசன டிக்கெட் கொடுத்துவிட்டு, பலரிடம் பணம் பெற்று கொண்டு டிக்கெட் வழங்காமல் தரிசனத்திற்கு அனுமதித்தது தெரியவந்தது. இதுபோல் தொடர்ந்து மோசடியில் ஈடுபட்டு வந்துள்ளனர்.
இதையடுத்து ஆணையர் ஞானசேகரன், டிக்கெட் மோசடியில் ஈடுபட்ட சிங்காரம், பிரேம்குமார் ஆகிய இருவரையும் சஸ்பெண்ட் செய்து நேற்று அதிரடியாக உத்தரவிட்டார்.தரிசன டிக்கெட் விற்பனையில் மோசடி செய்தது தொடர்பாக 2 ஊழியர்கள் சஸ்பெண்ட் செய்யப்பட்ட சம்பவம் ஊழியர்கள் மற்றும் பக்தர்களிடையே பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.