சென்னை: நடிகர் சங்கத்திற்கு தனி அதிகாரியை நியமித்ததை எதிரித்து நடிகர் விஷால் தரப்பில் நீதிபதி ஆதிகேசவலு அமர்வில் முறையீடு செய்யப்பட்டுள்ளது. தென்னிந்திய நடிகர் சங்கத்தை நிர்வகிக்க சிறப்பு அதிகாரியாக பதிவுத்துறை உதவி ஐஜி பி.வி.கீதா என்பவரை நியமித்து தமிழக அரசு நேற்று ஒரு உத்தரவு பிறப்பித்தது. தென்னிந்திய நடிகர் சங்க புதிய நிர்வாகிகள் தேர்வு தொடர்பான வழக்கு நீதிமன்றத்தில் நிலுவையில் உள்ள நிலையில், தமிழக அரசு இந்த நடவடிக்கையை மேற்கொண்டுள்ளது. தென்னிந்திய நடிகர் சங்கத்திற்கு கடந்த ஜூன் 23ம் தேதி தேர்தல் நடைபெற்றது. ஆனால் வாக்கு எண்ணிக்கை தற்போது வரை நடைபெறாமல் வழக்கு நிலுவையில் உள்ளது.
இந்தத் தேர்தலில் பதிவான வாக்குகள், சென்னை நுங்கம்பாக்கத்தில் உள்ள சவுத் இந்தியன் வங்கி கிளை பாதுகாப்பு பெட்டகத்தில் வைக்கப்பட்டுள்ளன. நடிகர் சங்கத் தேர்தலையும் தேர்தல் தொடர்பான அறிவிப்பையும் எதிர்த்து சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்குத் தொடரப்பட்டது. வாக்கு எண்ணிக்கை குறித்து நடிகர் சங்கம் சார்பில் தொடரப்பட்ட வழக்கில், எழுத்துப்பூர்வமான வாதங்களை தாக்கல் செய்ய உத்தரவிட்டு விசாரணையை சென்னை உயர்நீதிமன்றம் தள்ளிவைத்தது. இதனிடையே நடிகர் சங்கத்தில் உறுப்பினர்களாக இருந்த சிலர் தென்னிந்திய நடிகர் சங்கம் சரிவர செயல்படவில்லை எனவும், மேலும் நடிகர் சங்கத்திற்காக நடைபெறும் கட்டுமான பணிகளில் தொய்வு ஏற்பட்டுள்ளதாகவும் குற்றம் சாட்டியுள்ளனர்.
இந்த நிலையில், வாக்கு எண்ணிக்கை முறையாக நடத்தப்பட்டு, புதிய நிர்வாகிகள் தேர்ந்தெடுக்கப்படும் வரை நடிகர் சங்கத்தை நிர்வகிப்பதற்காக கீதா என்பவரை சிறப்பு அதிகாரியாக நியமித்து தமிழக அரசு நேற்று ஆணை பிறப்பித்திருந்தது. இந்த உத்தரவை எதிரித்து இன்று நடிகர் விஷால் தரப்பில் வழக்கறிஞர் ராஜராஜன் ஐகோர்ட்டில் முறையீடு செய்துள்ளார். இதனை அவசர வழக்காக எடுத்துக்கொள்ள வேண்டும் எனவும் முறையீடு செய்யப்பட்டது. இதனை கேட்ட நீதிபதி ஆதிகேசவலு, நடிகர் சங்கம் தொடர்பான வழக்கு நீதிபதி கலயாணசுந்தரம் அமர்வில் நிலுவையில் உள்ளது. இந்த முறையீடு தொடர்பாக பொறுப்பு தலைமை நீதிபதியை அணுகி இந்த வழக்கை விசாரணைக்கு எடுப்பது தொடர்பாக உரிய நடவடிக்கைகளை எடுத்துக்கொள்ளலாம் என நீதிபதி ஆதிகேசவலு தெரிவித்துள்ளார்.