லக்னோ: சர்ச்சைக்குரிய அயோத்தி வழக்கில் தீர்ப்பு வெளியாக உள்ள நிலையில், பொதுமக்களின் பாதுகாப்புக்கு மத்திய, மாநில அரசுகளே பொறுப்பு ஏற்க வேண்டும் என பகுஜன் சமாஜ் கட்சித் தலைவர் மாயாவதி கருத்து தெரிவித்துள்ளார். அயோத்தி வழக்கை தலைமை நீதிபதி ரஞ்சன் கோகாய் தலைமையில், நீதிபதிகள் எஸ்.ஏ.பாப்டே, டி.ஒய்.சந்திராசூட், அசோக் பூஷண், எஸ்.ஏ.நசீர் அடங்கிய அரசியல் சாசன அமர்வு விசாரித்து தீர்ப்பை ஒத்திவைத்துள்ளது. இந்த சூழலில், தலைமை நீதிபதி ரஞ்சன் கோகாய் வரும் 17ம் தேதி ஓய்வு பெற உள்ளதால், அதற்கு முன்பாக தீர்ப்பு வெளியாகும் என்று தகவல்கள் தெரிவிக்கின்றன. இந்நிலையில், பகுஜன் சமாஜ் தலைவர் மாயாவதி நேற்று தனது டிவிட்டர் பதிவில், `‘அயோத்தி வழக்கில் விரைவில் தீர்ப்பு வெளியாக உள்ளது. இதனால் நாடு முழுவதும் ஒருவித அமைதியின்மையும், மக்கள் மனதில் சந்தேகமும் நிலவுகிறது. நாடு, மக்களின் நலனை கருத்தில் கொண்டு உச்ச நீதிமன்றம் வெளியிடும் தீர்ப்பை மக்கள் ஏற்றுக் கொள்ள வேண்டும். தீர்ப்பு வெளியாக உள்ள நிலையில், பொதுமக்களுக்கு உரிய பாதுகாப்பு அளிக்க வேண்டியது மத்திய, மாநில அரசுகளின் பொறுப்பாகும்’ என கூறியுள்ளார்.