லக்னோ: அரியானா, பஞ்சாப் உள்ளிட்ட மாநிலங்களில் அறுவடைக்கு பின் மீதமுள்ள பயிர்களின் அடிப்பகுதி, வேரை மறுமுறை எரிப்பதை வழக்கமாக கொண்டுள்ளனர். இதனால் அங்கு ஒவ்வொரு ஆண்டும் அறுவடை காலத்தின்போது, காற்று மாசு ஏற்படுகிறது. இப்படி எரிப்பதை தவிர்க்கும்படி பஞ்சாப், அரியானா மாநில அரசுகளை டெல்லி அரசு கேட்டுக்கொண்டது. ஆனாலும் அறுவடைக்குபின், காய்ந்த பயிர்களின் அடிப்பகுதியை எரிப்பது தொடர்ந்து வருகின்றன. இதனால் நவம்பர் 8-ம் தேதி வரை பள்ளிகளுக்கு டெல்லி அரசு விடுமுறை அறிவித்துள்ளது. மேலும், காற்றுமாசு விவகாரம் தொடர்பாக பஞ்சாப், அரியானா தலைமை செயலாளர்கள், டிஜிபிக்கள் பதிலளிக்க உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
இந்த வழக்கு மீதான விசாரணை நீதிபதிகள் அருண் மிஸ்ரா, தீபக் குப்தா ஆகியோர் அடங்கிய அமர்வில் நடந்தது. அப்போது, பயிர்க்கழிவுகள் எரிப்பைத் தடுக்க மேற்கொள்ளப்பட்ட நடவடிக்கைகள் குறித்து 6-ம் தேதி நேரில் ஆஜராகி விளக்கமளிக்க, பஞ்சாப், ஹரியானா, உத்தரப்பிரதேச தலைமைச் செயலாளருக்கு சம்மன் அனுப்ப நீதிபதிகள் ஆணையிட்டனர். இதற்கிடையே, மக்கள், காற்று மாசுபாட்டில் இருந்து தங்களை பாதுகாத்துக் கொள்ள முகமூடி அணிந்தபடியே வெளியே வருகின்றனர். பள்ளி செல்லும் குழந்தைகளும் முகமூடியுடனேயே காணப்படுகின்றனர்.
இந்நிலையில், உத்தர பிரதேச மாநிலம் வாரணாசியில் உள்ள தர்கேஸ்வர மகாதேவ கோவிலில் சிவலிங்கத்திற்கு மாஸ்க் அணிந்து வழிபட்ட நிகழ்வு அரங்கேறி உள்ளது. வாரணாசி தர்கேஷ்வர் மகாதேவ் கோவிலில் உள்ள சிவலிங்கத்திற்கு பூசாரிகள் மாஸ்க் அணிவித்து பூஜை செய்தனர். இந்த நச்சுக் காற்றில் இருந்து ஈசனை பாதுகாப்பதற்காகவே நாங்கள் முகமூடி அணிவித்துள்ளோம். அவர் பாதுகாப்பாக இருந்தால், நாமும் பாதுகாப்பாக இருப்போம் என பூசாரிகள் கூறினர். இதேபோல் வாரணாசியின் சிக்ரா பகுதியில் உள்ள சிவன் கோவிலில் சிவன், பார்வதி சிலைகளுக்கும் மாஸ்க் அணிவிக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.
காற்று மாசின் அளவு:
காற்று மாசின் அளவு 500 என்ற எண் மூலம் மதிப்பிடப்படுகிறது. காற்று மாசு 5 பிரிவுகளாக வகைப்படுத்தப்பட்டுள்ளது. தூய்மையான காற்று 0-50, சுவாசிக்க தகுந்த காற்று 50-100, ஓரளவு மாசுபட்ட காற்று 100-200, மாசுபட்ட காற்று 200- 300, மோசமான காற்று 300- 400, அபாய அளவு 400-500 என வகைப்படுத்தப்பட்டுள்ளது.