சென்னை : தமிழ்நாடு முழுவதும் யூரியா உரத்திற்கு கடுமையான தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளதால் விவசாயம் பாதிக்கப்பட்டு இருப்பதாக பாமக நிறுவனர் ராமதாஸ் குற்றம் சாட்டியுள்ளார். தமிழக விவசாயிகளுக்கு யூரியா தாராளமாக கிடைக்க நடவடிக்கை தேவை என பா.ம.க நிறுவனர் ராமதாஸ் வலியுறுத்தியுள்ளார். யூரியா போடப்படாவிட்டால் நெற்பயிர்களின் வளர்ச்சி குறைந்து விடும் எனக் குறிப்பிட்ட அவர் கரும்பு, வாழை பயிர்களுக்கு அடி உரமாக பொட்டாஷ், டி.ஏ.பி ஆகியவை அதிக அளவில் தேவைப்படும் என்பதால் அவைகள் போதிய அளவு இருப்பில் இருப்பதை அரசு உறுதி செய்ய வேண்டும் எனக் கேட்டுக்கொண்டார்.
இது குறித்து அவர் விடுத்துள்ள அறிக்கையில், தமிழ்நாடு முழுவதும் சம்பா சாகுபடி பணிகள் தீவிரம் அடைந்துள்ளதை சுட்டிக் காட்டியுள்ளார். நெற்பயிர் நடப்பட்ட நாளில் இருந்து முதலில் 15 நாட்களிலும் பின்னர் 30வது மற்றும் 45வது நாட்களிலும் யூரியா உரம் இடம் வேண்டியது மிகவும் அவசியம் என்று ராமதாஸ் குறிப்பிட்டுள்ளார். போதிய அளவு யூரியா உரம் போடாவிட்டால் விளைச்சல் குறைந்து உழவர்களுக்கு பெறும் இழப்பு ஏற்படும் என்றும் அவர் கூறியுள்ளார்.
ஆனால் தமிழ்நாடு முழுவதும் தேவைக்கு ஏற்ப யூரியா உரம் விநியோகிக்கப்படவில்லை என்பதே உண்மை என்று ராமதாஸ் குறிப்பிட்டுள்ளார். எனவே தமிழ்நாட்டிற்கு தேவையான யூரியா உரத்தை பெறுவதற்கு அரசு போர்க்கால அடிப்படையில் நடவடிக்கைகள் மேற்கொள்ளவேண்டும் என்றும் அவர் அறிக்கையின் வாயிலாக கேட்டுக் கொண்டுள்ளார்.