×

முரசொலி நிலம் குறித்து உரிய நேரத்தில் ஆதாரங்களுடன் உண்மையை நிரூபிப்பேன்: இந்த உறுதியே வீண்பழி சுமத்துவோருக்கு இறுதி பதிலாக அமையும்... ஸ்டாலின் அறிக்கை

சென்னை: முரசொலி வெறும் நாளேடு மட்டுமல்ல; அது கலைஞரின் மூத்த பிள்ளை மட்டுமல்ல, ஒவ்வொரு திமுக தொண்டரின் உயிர் மூச்சு என திமுக தலைவர் ஸ்டாலின் அறிக்கை வெளியிட்டுள்ளார். இது தொடர்பாக திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் வெளியிட்டுள்ள அறிக்கையில்; முரசொலி அமைந்துள்ள இடம் பஞ்சமி நிலம் அல்ல என்பதை நிரூபிக்க வேண்டிய தருணத்தில் நிரூபிப்பேன். பஞ்சமி நிலத்தினை வாங்கினோம் என்று மருத்துவர் ராமதாஸ் கடந்த மாதம் 17-ம் தேதி அறிக்கை விட்டதாகவும், அன்றே அது பச்சைப் பொய் என்று பட்டா நகலின் ஆதாரத்துடன் மறுப்பு அறிவிக்கை தந்ததையும் சுட்டிக்காட்டியுள்ளார். ராமதாஸ் சொன்னதை நிரூபித்தால் தான் அரசியலை விட்டே விலக தாயார் என்றும்;

அப்படி நிரூபிக்க தவறினால் அவரும் அவரது மகன் அன்புமணி ராமதாசும் அரசியலை விட்டு விலக தயாரா என்றும் அறைக்கூவல் விடுத்ததாகவும் அதன் பின் அங்கிருந்து எதுவும் பதிலில்லை என்றும் அவர் கூறினார். இந்த நிலையில் மீண்டும் கடந்த மாதம் 19-ம் தேதி மூலப் பத்திரங்களைக் காட்டிடவில்லையென்று ஓர் அறிக்கை தந்ததாகவும்,, பொது வழியிலும் சரி, நீதிமன்றத்திலும் குற்றம் சுத்தியவர் தானே நிரூபித்திட வேண்டும் என்றும் கூறினார். முரசொலி பஞ்சமி நிலம் அல்ல என்று நாங்கள் நிரூபிக்க வேண்டிய தருணம் வரும் போது உரிய ஆவணங்களின் ஆதாரத்துடன் யாருக்கும் எந்தவித சந்தேகத்திற்கும் இடமில்லாமல் நிரூபித்திடுவோம் என முக ஸ்டாலின் உறுதி அளித்துள்ளார்.

அக்.21-ம் தேதி பாஜக மாநிலச் செயலாளர் சீனிவாசன், தேசிய தாழ்த்தப்பட்டோர் நல ஆணையத்திடம் இது குறித்து புகார் அளித்ததன் அடிப்படையில் தேசிய தாழ்த்தப்பட்டோர் ஆணையம் தமிழக தலைமை செயலாளருக்கு பாஜக மாநில செயலாளர் சீனிவாசன் புகாரின் அடிப்படியில் நோட்டீஸ் அனுப்பியதாகவும் இதனிடையே முதல்வர் பழனிசாமி பஞ்சமி நிலமாக இருந்தால் அரசு உரிய நடவடிக்கை எடுக்கும்;  அதன் உண்மைத்தனை ஆராயப்படும் என்றும் பேசியதையும் ஸ்டாலின் சுட்டிக்காட்டியுள்ளார். தேசிய தாழத்தப்பட்டோர் நல ஆணையம் தமிழக அரசின் தலைமை செயலாளருக்கு மீண்டும் நோட்டீஸ் அனுப்பியிருப்பதாகவும்,

வரும் 19-ம் தேதி ஆஜராக உத்தரவிட்டிருப்பதாக செய்திகள் மூலம் அறிந்ததாகவும், அரசு நிர்வாகத்தில் தான் என்னே ஒரு வேகம் என்றும் தெரிவித்துள்ளார். 2015-ல் செம்பரம்பாக்கம் ஏரி உடைந்த போதும், அண்மையில் சிறுவன் சுஜித் உயிருக்கு போராடிய போதும், இன்னும் பல்வேறு நிகழ்வுகளிலும் பொதுநலன் கருதி காட்டியிருக்க வேண்டிய வேகம் அது என்றும் ஸ்டாலின் கூறியுள்ளார். அது சரி அதற்காகவா அவர்கள் ஆட்சியில் இருக்கிறார்கள் எனவும் வினவியுள்ளார். முரசொலி வெறும் நாளேடு மட்டுமல்ல; அது கலைஞரின் மூத்த பிள்ளை மட்டுமல்ல, ஒவ்வொரு திமுக தொண்டரின் உயிர் மூச்சு ஆகும்.

அரசியல் லாபத்திற்காக முரசொலி மீது பழி சுமத்துவதை நான் மட்டுமல்ல எந்த திமுக தொண்டரும் ஏற்க மாட்டார்கள். முரசொலி நிலம் குறித்து உரிய நேரத்தில் ஆதாரங்களை வழங்கி அதன் உண்மை தன்மையை நிரூபிப்பேன். என்னுடைய உறுதியான பதிலே வீண் பழி சுமத்துவோர் அனைவருக்கும் இறுதியான பதிலாய் அமையும் என்றும் கூறியுள்ளார்.


Tags : land ,Murasoli ,Stalin , Murasoli Land, Stalin's Report
× RELATED தமிழ்நாட்டில் தயாராகிறது ஜாகுவார் லேண்ட் ரோவர் கார்..!!