ஈத்தாமொழி: ராஜாக்கமங்கலம் குளச்சல் ரோட்டில் கல்லுக்கட்டி அடுத்துள்ள வெள்ளமோடிஅருகே மெயின் ரோட்டில் அதிக மின் அழுத்தம் கொண்ட மின் கம்பிகளை தாங்கி நிற்கும் மின் கம்பம் வாகனம் மோதியதில் பழுதடைந்துள்ளது. தொடர்ந்து பெய்து வரும் மழையால் இம்மின்கம்பம் நாளுக்கு நாள் சரிந்து கொண்டே வருவது பொதுமக்களை அச்சமடைய செய்துள்ளது. இந்த மின் கம்பம் ரோட்டை கடந்து செல்லும் மின் கம்பிகளையும் தாங்கி நிற்பதாகும்.
அடையாளம் தெரியாத வாகனம் இரவில் இக்கம்பத்தில் மோதி விட்டு சென்றிருக்கலாம் என தெரிகிறது. இப்பகுதியில் அடிக்கடி இவ்வாறு நடக்கிறது. மின்வாரிய அதிகாரிகள் சம்பந்தப்பட்ட காவல் நிலையத்தில் புகார் கொடுத்தால் குறிப்பிட்ட பகுதிகளில் கண்காணிப்பு கேமராக்கள் இருப்பதில்லை என்பதால் வாகனத்தை கண்டுபிடிக்க முடிவதில்லை. இதனால் மின்வாரிய அதிகாரிகள் எந்த கணக்கில் மின் கம்பத்தை மாற்றுவது என்று தெரியாமல் காலதாமதமாக்கி வருகின்றனர். உயிர் பலி ஏற்படும் முன் இந்த மின்கம்பத்தை சீரமைக்க அப்பகுதி மக்கள் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.