×

திருச்சி சிறுவன் மரணம் எதிரொலி நாடு முழுவதும் பயனற்று கிடக்கும் ஆழ்துளை கிணறுகளை மூடவேண்டும்

* தேசிய குழந்தைகள் ஆணையம் அதிரடி உத்தரவு
* அனைத்து தலைமை செயலாளர்களுக்கும் சுற்றறிக்கை
சென்னை: திருச்சி சிறுவன் மரணம் எதிரொலியாக நாடு முழுவதும் பயனற்ற நிலையில் உள்ள ஆழ்துளை கிணறுகளை மூட வேண்டும் என்று தமிழகம் உள்பட அனைத்து மாநில தலைமை செயலாளர்களுக்கும் தேசிய குழந்தைகள் ஆணையம் அதிரடி உத்தரவு பிறப்பித்துள்ளது. திருச்சி மாவட்டம் மணப்பாறை அருகே நடுக்காட்டுப்பட்டி கிராமத்தில் ஆழ்துளை குழாய் கிணற்றில் 2 வயது சிறுவன் சுஜித் தவறி விழுந்தான். சிறுவன் எப்படியும் மீட்கப்பட்டு விடுவான் என்று எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் 4 நாட்கள் போராட்டத்திற்கு பிறகு சுஜித் சடலமாக தான் மீட்கப்பட்டான். இந்த சம்பவம் தமிழகம் மட்டுமல்லாமல், இந்தியாவையே பெரும் சோகத்தில் ஆழ்த்தியது.சிறுவன் சுஜித் மறைவே கடைசியாக இருக்க வேண்டும். எனவே, இதுபோன்ற பயனற்ற ஆழ்துளை கிணறுகளை மூட வேண்டும் என்ற கோரிக்கை வலுத்துள்ளது. மேலும் இதுபோன்ற விபத்துகள் ஏற்பட்டால் மீட்க அதிநவீன இயந்திரங்களை அரசு வாங்க வேண்டும் என்ற கோரிக்கையும் வலுத்தது. சிறுவன் மறைவை அடுத்து அனைத்து மாநிலங்களிலும் உள்ள பயனற்ற ஆழ்துளை கிணறுகளை மூட தேசிய குழந்தைகள் ஆணையம் அதிரடி உத்தரவு பிறப்பித்துள்ளது.

இதுகுறித்து, தேசிய குழந்தைகள் ஆணைய உறுப்பினர் டாக்டர் ஆர்.ஜி.ஆனந்த் கூறியதாவது:ஒவ்வொரு குழந்தையின் பாதுகாப்பும், உரிமையும் பாதுகாக்கப்பட வேண்டும் என்பதில் தேசிய குழந்தைகள் ஆணையம் உறுதியாக உள்ளது. மனித தவறுகளால் நிகழும் இந்த மாதிரி சம்பவங்கள் உடனே தடுக்கப்பட வேண்டும். இதில் எந்தவித மாற்றுக்கருத்தும் கிடையாது. இதுபோன்ற பல சம்பவங்கள் நாடு முழுவதும் நடந்துள்ளன. இனியாவது இதற்கு முற்றுப்புள்ளி வைக்க வேண்டும். அதற்கான முயற்சிகளில் தேசிய குழந்தைகள் ஆணையம் மும்முரமாக இறங்கியுள்ளது.இதன் ஒருபகுதியாக, தமிழகம் உள்பட அனைத்து மாநில தலைமை செயலாளர்களுக்கும் அவசர சுற்றறிக்கை அனுப்பப்பட்டுள்ளது. அதாவது, மாவட்ட வாரியாக பயனற்ற ஆழ்துளை கிணறுகளை கண்டறிந்து மூடுவதற்கு அனைத்து மாவட்ட கலெக்டர்களுக்கும் உத்தரவிடப்பட்டுள்ளது. இதுபற்றிய அறிக்கையை 48 மணி நேரத்தில் அனுப்பும்படியும் கேட்டுள்ளோம். இனிமேல் எந்த பகுதியிலும் இந்த மாதிரி சம்பவங்கள் நடக்கக்கூடாது என்பதில் ஆணையம் உறுதியான நடவடிக்கையை தொடர்ந்து எடுக்கும்.இவ்வாறு அவர் கூறினார்.

Tags : death ,wells ,Trichy ,country , death,boy echoes across, country, closing ,useless deep wells
× RELATED திருச்சி மாவட்டம் ஸ்ரீரங்கம் அருகே...