புதுடெல்லி: போக்குவரத்து போலீசாரால் அபராதம் விதிக்கப்பட்ட ஆசாமி ஒருவர் குடிபோதையில் தனது பைக்கிற்கு தானே தீ வைத்து எரித்து ஆத்திரத்தை தீர்த்துக்கொண்ட சம்பவம் தெற்கு டெல்லியின் சாகேத் பகுதியில் அரங்கேறியுள்ளது. தெற்கு டெல்லியின் சாகேத் பகுதியில் உள்ள கோகா மார்க்கெட் பகுதியில் பார்க்கிங்கிற்கு இடையூறாக நோ பார்க்கிங் பகுதியில் நிறுத்தப்பட்ட இரு சக்கர வாகனத்தை சப் இன்ஸ்பெக்டர் ராஜேந்தர் அ்ங்கிருந்து அப்புறப்படுத்தி தற்காலிகமாக புஸ்ப் விகார் பகுதியில் நிறுத்தி வைத்தார். இதனால் போலீசார் 500 அபராதம் விதித்தனர்.
இந்நிலையில் பைக் ஆசாமி முகேஷ் என்பவர் பார்க்கிங் பகுதிக்கு வந்தபோது அவரிடம் அபராத ரசீது போலீசார் வழங்கினர். இதனால் போலீசாரிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டார். அவர் மது போதையில் இருந்தார். அங்கிருந்து சென்றுவிட்ட பின்னர் சிறிது நேரத்திற்கு பின் மீண்டும் சம்பவ இடத்திற்கு வந்து ஆத்திரம் தலைக்கேறிய நிலையில் தனது பைக்கிற்கு தானே தீ வைத்து கொளுத்தினார். இதுகுறித்து உள்ளூர் போலீசாருக்கு தகவல் கொடுத்து அவர்களிடம் முகேஷை ஒப்படைத்தனர். முகேஷ் மீது வழக்கு பதிவு செய்து அவரை கைது செய்து விசாரித்து வருகிறார்கள்.