×

ஆட்டோவில் சவாரிக்கு அழைப்பதுபோல் நடித்து பெண் நடன கலைஞரை தாக்கி வழிப்பறி: டிரைவர் கூட்டாளியுடன் கைது

சென்னை: திருவொற்றியூரை சேர்ந்த நடன கலைஞர் சிந்துஜா (27), நேற்று முன்தினம் இரவு, எண்ணுார் விரைவு சாலை, புச்சம்மாள் தெருவில் இருந்து வீட்டுக்கு செல்ல, அவ்வழியே வந்த ஷேர் ஆட்டோவில் ஏறினார். எண்ணுார் விரைவு  சாலை, கக்கன்ஜி நகர் அருகே சென்றபோது, ஆட்டோ டிரைவர் மற்றும் அவருடன் இருந்த நபர் இருவரும் சேர்ந்து, சிந்துஜாவை சரமாரி தாக்கி, அவர் அணிந்திருந்த தங்க கம்மல், மூக்குத்தி, வெள்ளி கொலுசு, செல்போன் மற்றும் ₹7 ஆயிரத்தை  பறித்தனர். பின்னர், ஓடும் ஆட்டோவில் இருந்து சிந்துஜாவை கீழே தள்ளிவிட்டு தப்பினர். இதில், சிந்துஜாவிற்கு வலது கையில் முறிவு ஏற்பட்டது. அக்கம் பக்கத்தினர் அவரை மீட்டு அரசு ஸ்டான்லி மருத்துவமனையில் சிகிச்சைக்காக  சேர்த்தனர். இதுகுறித்து, திருவொற்றியூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து, சம்பவ இடத்தில் உள்ள சிசிடிவி கேமராவை ஆய்வு செய்தனர். அதில், திருவொற்றியூர் தாங்கல் தெருவை சேர்ந்த ஆட்டோ டிரைவர் கிஷோர் (26), அவரது நண்பர்  ஆசிப் (25) ஆகியோர் வழிப்பறியில் ஈடுபட்டது தெரிந்தது. அவர்களை நேற்று போலீசார் கைது செய்தனர்.

* ஆலந்தூர் கற்பக விநாயகர் கோயில் தெருவை சேர்ந்த அம்பிகா (55), நுங்கம்பாக்கம் அவென்யூ சாலையில் உள்ள தனியார் நிறுவனத்தில் வேலை செய்து வருகிறார். இவர், ேநற்று முன்தினம் இரவு பணி முடிந்ததும் வீட்டிற்கு செல்ல  நுங்கம்பாக்கம் ரயில் நிலையம் நோக்கி லயோலா கல்லூரி அருகே உள்ள நடைபாதையில் நடந்து சென்றார். அப்போது பைக்கில் வந்த 2 பேர், அம்பிகா கழுத்தில் இருந்து மூன்றரை சவரன் செயினை பறித்து கொண்டு தப்பினர்.
* விழுப்புரம் மாவட்டத்தை சேர்த்த பெருமாள் (62), புளியந்தோப்பில் உள்ள தனது மகன் வீட்டில் தங்கி, கீழ்ப்பாக்கத்தில் வாட்ச்மேன் வேலை செய்து வந்தார். இவர் நேற்று முன்தினம் வேலை முடிந்து, அண்ணாநகர் வழியாக வீட்டிற்கு சென்று  கொண்டிருந்தபோது, அடையாளம் தெரியாத வாகனம் மோதி இறந்தார்.
*  தண்டையார்பேட்டை நேதாஜி நகரை சேர்ந்த மாநகராட்சி ஊழியர் பழனி (32) என்பவர், திருமணமாகி 5 ஆண்டுகள் ஆகியும் குழந்தை இல்லாததால், மன உளைச்சலில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார்.
* பொழிச்சலூரை சேர்ந்த சாஜித் (19) என்பவரை சரமாரி தாக்கி, அவரின் விலையுயர்ந்த செல்போன் மற்றும் பைக்கை பறித்துச் சென்ற, பல்லாவரத்தை சேர்ந்த கண்ணன் (24), ரமேஷ் (எ) போதை ரமேஷ் (26) மற்றும் கார்த்திக் (25) ஆகியோரை  போலீசார் கைது செய்தனர்.
* அறந்தாங்கியை சேர்ந்த மணிகண்டன் (26), நேற்று முன்தினம் காரில் சென்னை வந்தார். டிரைவர் அசாருதீன் (29) காரை ஓட்டினார். சென்னை விமான நிலையம் அருகே சென்றபோது, முன்னால் சென்ற காரை முந்தி செல்ல முயன்றனர்.  அப்போது, ஏற்பட்ட தகராறில், அந்த காரில் இருந்த 4 பேர், மணிகண்டன் காரை வழிமறித்து, அவரையும், டிரைவர் அசாருதீனையும் தாக்கினர். இதுகுறித்த புகாரின் பேரில் போலீசார் வழக்கு பதிந்து, குரோம்பேட்டையை சேர்ந்த மணிகண்டன்  (25), முருகானந்தம் (24), முருகுபாண்டி (24), முத்துக்குமார் (25) ஆகிய 4 பேரை கைது செய்தனர்.
* புளியந்தோப்பு சிவராஜபுரம் பகுதியை சேர்ந்த செல்வகுமார் என்பவரை கத்தி முனையில் மிரட்டி, வழிப்பறி செய்த வழக்கில், பிரகாஷ் (எ) குள்ள பிரகாஷ் என்பவரை போலீசார் கைது செய்தனர்.
* புழல் புத்தாகரம் லட்சுமிநகர் 2வது தெருவை சேர்ந்த கட்டிட தொழிலாளி ஏழுமலை (33), நேற்று காலை வீட்டில் இருந்த மின் மோட்டாரை இயக்கியபோது மின்சாரம் பாய்ந்து இறந்தார்.

Tags : Woman dancing ,ride ,call girl ,partner ,rickshaw dancer , Auto, female dancer, lover, driver partner, arrested
× RELATED கோவையில் ஜாலி ரைடு சென்ற நிர்மலாவை...