மானாமதுரை: தொடர் மழையால் மானாமதுரை மண்பாண்ட தொழிலாளர்கள் செய்து வைத்திருந்த மண்பாண்ட பொருட்கள் உற்பத்தி நிறுத்தப்பட்டு ஒருவாரத்திற்கு மேலாகிறது. மேலும், லட்சகணக்கான மதிப்புள்ள பொருட்கள் உலர வைக்க முடியாமலும், தயாரிப்பு ஒப்பந்தம் கால தாமதம் ஆகிவருவதால் தொழிலாளர்கள் செய்வதறியாது அதிர்ச்சியடைந்துள்ளனர்.மானாமதுரை பகுதியில் இரு வாரங்களாக அவ்வப்போது மழை பெய்து வருகிறது. இந்த நிலையில், கடந்த சனிக்கிழமை முதல் பகல் நேரங்களில் சாரல் மழை பெய்து வருகிறது. பெய்து வரும் கனமழையால் மண்பாண்ட தொழிலாளர் ஷெட்டில் மழைநீர் புகுந்துள்ளது. மேலும், இரண்டு நாட்களாக லட்சக்கணக்கான மதிப்புள்ள மண்பாண்ட மூலதன மண் அனைத்தும் கரைந்து வாறுகாலில் சென்று கொண்டிருக்கின்றன.
தயாரித்து வைத்திருக்கும் மண்பாண்ட பொருட்களை உலர வைக்க முடியவில்லை.இது குறித்து மண்பாண்ட தொழிலாளகள் கூறுகையில்,‘‘திடீரென இரவு முழுவதும் கொட்டிய மழையால் எங்கள் ஷெட்டுகளில் தண்ணீர் சூழ்ந்தது. பல குடும்பங்கள் கடந்த இரண்டு வாரங்களாக செய்து வைத்திருந்த லட்சகணக்கான பொருட்கள் உலர வைக்க முடியாமல் வீணாகி வருகிறது. இதனால் ஆர்டர் கொடுத்தவர்களுக்கு உரிய நாளில் பொருட்களை கொடுக்க முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. அரசு மழைக்கால நிவாரணம் வழங்க வேண்டும்’’ என்றனர்.