சென்னை: தமிழகத்தில் ஆழ்துளை கிணறு அமைக்கும்போது, கடைபிடிக்க வேண்டிய விதிமுறைகள் சரியாக கடைபிடிக்கப்படுகின்றனவா என்பதை உறுதி செய்யுமாறு அனைத்து மாவட்ட கலெக்டர்களுக்கும் முதல்வர் எடப்பாடி உத்தரவிட்டுள்ளார். இதுகுறித்து முதல்வர் எடப்பாடி பழனிசாமி நேற்று வெளியிட்டுள்ள அறிக்கை: திருச்சி மணப்பாறை அருகே நடுக்காட்டுப்பட்டி கிராமத்தில் கடந்த 25ம் தேதி பிரிட்டோ ஆரோக்கியராஜ் நிலத்தில் மூடப்படாத ஆழ்துளை கிணற்றில், அவருடைய இரண்டு வயது மகன் சுஜித் வில்சன் தவறி விழுந்து விட்டான்.
இந்த செய்தி குறித்து அறிந்தவுடன், சிறுவனை உயிருடன் மீட்பதற்கு தேவையான அனைத்து நடவடிக்கைகளையும் உடனடியாக எடுக்குமாறு, அமைச்சர்கள் விஜயபாஸ்கர், வெல்லமண்டி நடராஜன், வளர்மதி, வருவாய் நிர்வாக ஆணையர் ராதாகிருஷ்ணன் மற்றும் திருச்சி மாவட்ட ஆட்சியர் ஆகியோருக்கு உத்தரவிட்டிருந்தேன். அமைச்சர்கள் மற்றும் அதிகாரிகள், இரவு பகலாக மீட்பு பணிகளை மேற்கொண்டனர். சிறுவனை உயிருடன் மீட்பதற்காக அதிநவீன இயந்திரங்களை கொண்டு சிறுவன் சிக்கிக்கொண்ட ஆழ்துளை கிணற்றின் அருகே புதியதாக ஒரு பெரிய ஆழ்துளை கிணறு தோண்டும் பொழுது கடினமான பாறைகள் இருந்ததால் மீட்பு பணிகளில் பல்வேறு சிரமங்கள் ஏற்பட்டன. அந்த சிரமங்களை எல்லாம் வல்லுநர் குழு உதவியுடன் சரிசெய்து குழந்தையை உயிருடன் மீட்க இரவு பகலாக மீட்பு பணிகள் மேற்கொள்ளப்பட்டன. இருந்தும் சிறுவன் சுஜித் வில்சன் சடலமாக மீட்கப்பட்டான்.
ஏற்கனவே ஆழ்துளை கிணறு அமைக்கும்போது, கடைபிடிக்க வேண்டிய வழிமுறைகள் குறித்த விதிகளை வகுத்து, அரசிதழிலும் வெளியிடப்பட்டுள்ளது. இந்த விதிமுறைகள் சரியாக கடைபிடிக்கப்படுகின்றனவா என்பதை உறுதி செய்யுமாறு அனைத்து மாவட்ட ஆட்சியர்களுக்கும் உத்தரவிட்டுள்ளேன். இதில் கவனக்குறைவு ஏதும் இருந்தால், சம்பந்தப்பட்டவர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கவும் அரசு அதிகாரிகளுக்கு உத்தரவிட்டுள்ளேன். இனி வருங்காலங்களில் இதுபோன்ற துயர சம்பவங்கள் நிகழாமல் இருக்க பொதுமக்களும் தங்களுடைய நிலங்களில் ஆழ்துளை கிணற்றை மூடும்போது உரிய பாதுகாப்பு வழிமுறைகளை பின்பற்ற வேண்டும்.
மீட்பு பணிகளை இரவு பகலாக மேற்கொண்ட அமைச்சர்கள், அதிகாரிகள் மற்றும் பொதுமக்கள் அனைவரையும் நன்றியுடன் நினைவுகூர்கிறேன். இந்த துயர சம்பவத்தில் உயிரிழந்த சிறுவன் சுஜித் வில்சன் பெற்றோருக்கும், உறவினர்களுக்கும் ஆழ்ந்த இரங்கலையும், அனுதாபத்தையும் தெரிவித்துக் கொள்கிறேன்.இவ்வாறு அவர் கூறியுள்ளார்.