சென்னை: வண்டலூர் உயிரியல் பூங்காவிலுள்ள காண்டாமிருகத்தை பூங்கா இணைய தளத்தில் இன்று முதல் கண்டுகளிக்கலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது. வண்டலூர் அறிஞர் அண்ணா உயிரியல் பூங்கா, தென்கிழக்கு ஆசியாவின் மிகப்பெரிய பூங்கா. இது, உள்நாட்டு, வெளிநாட்டு பயணிகளுக்கு சிறந்த சுற்றுலாத்தலமாக விளங்குகிறது. பூங்காவில் உள்ள விலங்குகளை 24 மணி நேரமும் இணையதள ஒளிபரப்பில் காணும் வகையில் வசதி செய்யப்பட்டுள்ளது. அதன்படி, 14 விலங்கு இனங்களை 24X7 நேரடி ஒளிபரப்பில் காண இயலும். அதன்படி இதுவரை, 3.5 கோடி பேர் உலகெங்குமிருந்தும் கண்டுகளித்துள்ளனர்.
30 ஆண்டுகளுக்கு பின் காண்டாமிருகம் அதிக பார்வையாளர்ளை கவர்ந்துள்ளது. காண்டாமிருகத்தின் இருப்பிடத்தை முதல்வர் பழனிசாமி கடந்த 10ம் தேதி பார்வையாளர்கள் காணும் வகையில் திறந்து வைத்தார். காண்டாமிருக இணையை அதன் இருப்பிடத்திலிருந்து நேரடி ஒளிபரப்பின் மூலம் காணும் வசதியை பூங்கா நிர்வாகம் செய்துள்ளது. இதன் மூலம் உலகில் எங்கிருந்தும் பூங்காவிலுள்ள காண்டாமிருகத்தை பூங்கா இணையதளமான www.aazp.in-ல் இன்று முதல் கண்டுகளிக்கலாம்.