பண்ருட்டி: பண்ருட்டி அருகே நேற்று முன்தினம் இரவு பைக் மீது அரசு பஸ் மோதிய விபத்தில் இன்ஜினியரிங் கல்லூரி மாணவர்கள் இருவர் உள்பட 3 பேர் பரிதாபமாக பலியானார்கள். கடலூர் மாவட்டம் பண்ருட்டி அருகே வீரப்பெருமாநல்லூர் கிராமத்தை சேர்ந்தவர் காசிநாதன் மகன் சிவகண்டன் (20). பெங்களூரில் உள்ள காய்கறி கடையில் வேலை செய்து வந்தார். அதே பகுதியை சேர்ந்தவர் பழனி மகன் அஜித்குமார் (20). சங்கர் மகன் சந்துரு (20). 2 பேரும் உளுந்தூர்பேட்டை பாதூர் பகுதியில் உள்ள தனியார் இன்ஜினியரிங் கல்லூரியில் மூன்றாம் ஆண்டு டிப்ளமோ படித்து வந்தனர்.
நண்பர்களான 3 பேரும் நேற்று முன்தினம் இரவு ஒரே பைக்கில் கெடிலம் சாலையில் உள்ள ஒரு பெட்ரோல் பங்கிற்கு சென்று பெட்ரோல் போட்டுவிட்டு மீண்டும் வீட்டுக்கு திரும்பி வந்து கொண்டிருந்தனர். அஜித்குமார் பைக்கை ஓட்டினார். பங்க் அருகில் வந்தபோது அரசு டவுன் பஸ் எதிர்பாராதவிதமாக பைக்கின் பின்புறமாக மோதியது. இதில் 3 பேரும் கீழே விழுந்தனர். இதில் பஸ்சின் சக்கரம் ஏறியதில் 3 பேரும் இறந்தனர். இதுகுறித்து சிவகண்டன் உறவினர் சிவக்குமார் கொடுத்த புகாரின்பேரில் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.