சென்னை: சென்னை மாநகருக்கு குடிநீர் வழங்கும் 4 ஏரிகளில் சோழவரம் ஏரி ஒன்று. 1081 மில்லியன் கன அடி கொள்ளளவு கொண்ட இந்த ஏரி வடகிழக்கு பருவமழை மூலம் கிடைக்கும் நீரை நம்பி உள்ளது. இந்நிலையில், கடந்தாண்டு வடகிழக்கு பருவமழை பொய்த்த நிலையில் சோழவரம் ஏரி கடந்த மே மாதத்தில் முற்றிலும் வறண்டு விட்டது. இதை தொடர்ந்து, அந்த ஏரி பகுதி மேய்ச்சல் நிலமாகவும் வாத்து மேய்ப்பவர்களின் கூடாரமாகவும் மாறியது. தற்போது, சோழவரம் ஏரி தூர்வாரி ஆழப்படுத்தும் பணி நடந்து வருகிறது.ஆனால், கடந்த சில நாட்களுக்கு பெய்து வரும் மழை காரணமாக சோழவரம் ஏரிக்கு நீர்வரத்து அதிகரித்தது. தற்போது 1081 மில்லியன் கன அடி கொள்ளளவு கொண்ட சோழவரம் ஏரியில் 98 மில்லியன் கன அடியாக நீர் இருப்பு உள்ளது. தொடர்ந்து, ஏரிக்கு 185 கன அடி வீதம் தண்ணீர் வந்து கொண்டிருந்தது.
இதற்கிடையே சோழவரம் ஏரி நீர் கருப்பு நிறமாக மாறியதாகவும், அந்த நீர் துர்நாற்றம் வீசியதாகவும் புகார் எழுந்தது. இதை ெதாடர்ந்து அந்த நீரை ஆய்வு செய்ய பொதுப்பணித்துறை சென்னை குடிநீர் ஆய்வு மையத்துக்கு கடிதம் எழுதியது. தொடர்ந்து ஏரிகளில் இருந்து தண்ணீர் எடுக்க குடிநீர்வாரியத்துக்கு பொதுப்பணித்துறை தடை விதித்தது.இந்நிலையில், சோழவரம் ஏரி நீரை குடிநீர் ஆய்வு மையம் பரிசோதனை செய்தது. இதன் முடிவில், சோழவரம் ஏரி நீரை சுத்திகரித்து குடிநீருக்கு பயன்படுத்திக் கொள்ளலாம் என்று பொதுப்பணித்துறைக்கு ஆய்வு மையம் அறிக்கை அளித்தது. இதை தொடர்ந்து சோழவரம் ஏரி நீரை குடிநீருக்கு எடுத்துக்கொள்ள பொதுப்பணித்துறை குடிநீர் வரியத்துக்கு அனுமதி வழங்கியுள்ளது. இதையடுத்து ஓரிரு நாளில் சோழவரம் ஏரியில் இருந்து சென்னை மாநகரின் குடிநீருக்கு தண்ணீர் எடுக்க சென்னை குடிநீர் வாரியம் முடிவு செய்துள்ளது.