சென்னை: சென்னையில் இருந்து கொரியர் மூலம் அமெரிக்காவுக்கு கடத்த முயன்ற 1.37 லட்சம் மதிப்புள்ள போதை மாத்திரைகளை மத்திய வருவாய் புலனாய்வு அதிகாரிகள் பறிமுதல் செய்தனர். சென்னையில் போதை மாத்திரைகள் தயாரித்து, கொரியர் மூலம் வெளிநாடுகளுக்கு கடத்தப்படுவதாக மத்திய வருவாய் புலனாய்வு துறையினருக்கு புகார் வந்தது. அதன்படி அதிகாரிகள் சென்னையில் உள்ள ஒரு கொரியர் நிறுவனத்தில் சோதனை நடத்தினர். அப்போது, 9 பொட்டலங்களில் போதை மாத்திரைகள் இருப்பது தெரியவந்தது. உடனடியாக அதிகாரிகள் அதனை கைப்பற்றி சோதனை செய்தனர்.
அதில் 1.37 லட்சம் மதிப்புள்ள போதை மாத்திரைகள், வயாகரா மாத்திரைகள் இருப்பது தெரிந்தது. மேலும் விசாரணயில் சத்து மாத்திரைகள் என்று கூறி, போலி ஆவணங்களை கொரியர் நிறுவனத்திடம் ஒப்படைத்து அமெரிக்காவிற்கு கடத்த முயன்றது தெரியவந்தது. இதனை அம்பத்தூரில் உள்ள ஒரு வீட்டில் வைத்து தயாரித்தாக விசாரணையில் தெரியவந்துள்ளது. விமானம் மூலம் கொரியரில் கடத்த முயன்ற 3 பேரை அதிகாரிகள் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.