சென்னை: கோவை பாரதியார் பல்கலைக்கழக துணைவேந்தராக பேராசிரியர் காளிராஜை நியமித்து, கவர்னர் பன்வாரிலால் புரோகித் உத்தரவிட்டுள்ளார். இதுதொடர்பாக கவர்னர் அலுவலகம் வெளியிட்ட செய்திக்குறிப்பு: கோவை பாரதியார் பல்கலைக்கழக துணைவேந்தராக பேராசிரியர் காளிராஜ் நியமிக்கப்பட்டுள்ளார். அவர் அடுத்த 3 ஆண்டுகளுக்கு அந்த பதவியில் தொடர்வார். பேராசிரியர் காளிராஜ் தற்போது அண்ணா பல்கலைக்கழக பயோடெக்னாலஜி துறையின் இந்தியன் கவுன்சில் பார் மெடிக்கல் ரிசர்ச் கவுரவ ஆராய்ச்சியாளராகவும், பேராசிரியராகவும் உள்ளார். கல்வித்துறையில் 31 ஆண்டு அனுபவம் பெற்றவர். பேராசிரியர் காளிராஜின் மனைவி டாக்டர் வனஜா, சென்னை மற்றும் பிற நகரங்களில் கிளைகளுடன் நீரிழிவு நோய் சிகிச்சை மையம் நடத்தி வருகிறார்.