ஆந்திர மாநிலம்: தமிழகம் மற்றும் ஆந்திராவில் உள்ள கல்கி ஆசிரமத்தின் 40 கிளைகளில் வருமான வரித்துறையினர் சோதனையில் ஈடுபட்டு வருகின்றனர். ஆந்திரா மாநிலம் சித்தூர் மாவட்டம் வரதப்பாளையத்தில் தலைமையகமாக கொண்டு செயல்பட்டு வரும் கல்கி ஆசிரமம் , நாடு முழுவதும் பல்வேறு இடங்களில் கிளை அமைத்து, அந்த ஆசிரமத்துக்கு வரக்கூடியவர்கள் யோகா, தியானம் போன்றவற்றை செய்து வருவதாக கூறப்படுகிறது.
இந்து கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு இந்த ஆசிரமத்தில் போதைப்பொருட்கள் பயன்படுத்துவதாகவும் வெளிநாட்டில் இருந்து நிதி கொண்டுவரப்பட்டு அதில் போதைப்பொருட்கள் வாங்கப்படுவதாக குற்றச்சாட்டுகள் பரவலாக எழுப்பப்பட்டது. கடந்த சில ஆண்டுகளாக இந்த ஆசிரமம் குறித்து எந்த தகவலும் வெளிவராத நிலையில் இன்று திடீரென வருமான வரித்துறையினர் சோதனையில் ஈடுபட்டு வருகின்றனர். வரதப்பாளையத்தில் மட்டும் 4 அதிகாரிகள் தலைமையில் தனிப்படையினர் சோதனையில் ஈடுபட்டு வருகின்றனர். இதனால் அங்கு பணிபுரிகின்ற யாரையும் வெளியே அனுப்பாமல் , புதிதாக வருபவர்களை உள்ளே அனுமதிக்கவில்லை என்று தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் ஊடங்களையும் உள்ளே அனுமதிக்காமல் சோதனையில் ஈடுபட்டுள்ளனர்.
இந்நிலையில் வரதப்பாளையத்தில் வருமான வரித்துறையினர் சோதனையில் ஈடுபடுவது போன்று கல்கி ஆசிரமத்தின் 40 கிளைகளிலும் வருமான வரித்துறையினர் சோதனையில் ஈடுபட்டு வருகின்றனர். இந்த சோதனையில் பல்வேறு திடுக்கிடும் தகவல்கள் வெளிவரும் என எதிர்பார்க்கப்படுகிறது. தொடர்ந்து இந்த சோதனை நடைபெற்று வரும் நிலையில் இந்த சோதனை எப்போது நிறைவு பெறும் என்று கண்காணிக்கப்பட்டு வருகிறது. குடியாசத்தில் இருந்த ஆசிரியர் ஒருவர் , சாமியாராக அவதாரம் எடுத்து, பல்வேறு வெளிநாடுகளில் இருந்து வரக்கூடிய பக்தர்களுக்கு நீதிபோதனைகளை கூறியதாகவும், அதன்பிறகு அவர்களுக்கு போதைப்பொருட்கள் வழங்கி அவர்களை ஆழ்ந்த நித்திரைக்கு கொண்டு சென்றதாகவும், அதன் மூலமாக வெளிநாட்டில் இருந்து நிதிகளை திரட்டி பல்வேறு கிளைகளை அமைத்து, இவர்கள் இதை ஒரு தொழிலாகவே பின்பற்றியதாக கூறப்படுகிறது.
இந்த ஆசிரமத்திற்கு பல முன்னணி நடிகர்கள் வந்து செல்வது வழக்கமான ஒன்றாகும். ஏற்கனவே கடந்த 8 ஆண்டுகளுக்கு முன்னர் இந்த ஆசிரமத்தில் பிரம்மாண்டமான கும்பாபிஷேகம் நடைபெற்றது. இந்த நடைபெற்ற இடத்தில 10-க்கும் மேற்பட்டோர் உயிரிழந்த சம்பவம் நிகழ்ந்தது. மேலும் இந்த ஆசிரமத்தில் போதைப்பொருட்கள் பயன்படுத்துவதாக குற்றச்சாட்டுகள் தொடர்ந்த வண்ணமே இருந்தது. கல்கி ஆசிரமத்தின் ஏகே.1 டிரஸ்ட் -ன் துணைத்தலைவர் லோகேஷ் என்பவரை தனி அறையில் வைத்து விசாரணை நடத்தி வருகின்றனர். இவர்களுக்கு பணம் எங்கிருந்து வருகிறது, யார் யார் இங்கு வந்து செல்கிறார்கள் ,எந்த நடிகர்களுடன் தொடர்பு உள்ளது , அரசியல்வாதிகள் யாரேனும் உள்ளார்களா? என்ற கோணத்தில் விசாரணை செய்து வருகின்றனர்.