×

தமிழ் பல்கலையில் முறைகேடு லஞ்ச ஒழிப்புத்துறை விசாரிக்க உத்தரவு: அறிக்கை தாக்கல் செய்ய ஐகோர்ட் கிளை ஆணை

மதுரை: தஞ்சை தமிழ் பல்கலை.யில் நடந்த பணிநியமன முறைகேடு தொடர்பாக, லஞ்ச ஒழிப்புத்துறையினர் வழக்குப்பதிந்து, நடவடிக்கை எடுத்து அறிக்கை தாக்கல் செய்ய  ஐகோர்ட் கிளை உத்தரவிட்டுள்ளது. தஞ்சையைச் சேர்ந்த முருகேசன்,  ஐகோர்ட் மதுரை கிளையில் தாக்கல் செய்த மனுவில், தஞ்சை தமிழ் பல்கலைக்கழகத்தில் 2017-18ம் கல்வி ஆண்டில் நடந்த பேராசிரியர்கள், உதவி பேராசிரியர்கள், இணை பேராசிரியர்கள் மற்றும் நிர்வாக பணியாளர்கள், ஆசிரியர் அல்லாத  பணியாளர்கள் உள்ளிட்ட பணி நியமன முறைகேடு குறித்து ஓய்வு பெற்ற ஐகோர்ட் நீதிபதி தலைமையில் உயர்மட்ட குழு அமைத்து விசாரிக்க உத்தரவிட வேண்டும் என கூறியிருந்தார்.

இதேபோல், தஞ்சாவூரைச் சேர்ந்த நெடுஞ்செழியன் தாக்கல் செய்த மனுவில், ‘முறைகேடாக பணம் பரிமாறப்பட்டது குறித்தும், முறைகேடான பணி நியமனங்கள் குறித்தும் லஞ்ச ஒழிப்புத்துறையினர் விசாரித்து சம்பந்தப்பட்டவர்கள் மீது உரிய  நடவடிக்கை எடுக்க உத்தரவிட வேண்டும்’’ என்று கூறியிருந்தார். இந்த மனுக்களை நேற்று விசாரித்த நீதிபதிகள் டி.எஸ்.சிவஞானம், கிருஷ்ணன் ராமசாமி ஆகியோர், தஞ்சாவூர் லஞ்ச ஒழிப்பு டிஎஸ்பி வழக்குப்பதிந்து, சம்பந்தப்பட்டவர்கள் மீது  தகுந்த நடவடிக்கை எடுக்க வேண்டும். விசாரணை அறிக்கையை நவ. 25ல் சீலிடப்பட்ட கவரில் தாக்கல் செய்ய வேண்டுமென உத்தரவிட்டுள்ளனர்.


Tags : Tamilnadu , Tamil University, Corruption, Corruption Department, ICort Branch
× RELATED தமிழ்நாட்டில் நாளுக்கு நாள்...