நாமக்கல்: நாமக்கல்லில் உள்ள தனியார் கல்வி நிறுவனம் நடத்தி வந்த நீட்தேர்வு பயிற்சி மையத்தில், கடந்த 4 நாட்களாக வருமான வரித்துறை அதிகாரிகள் சோதனை நடத்தி வந்தனர். இந்த சோதனையின் போது, பயிற்சி மையத்தின் பிற கிளைகள், மைய இயக்குநர்களின் வீடுகள் என 17 இடங்களில் சோதனை நடத்தப்பட்டது. இதில், முறையாக கணக்கு காட்டாமல் இருப்பது தெரியவந்தது. அதைத் தொடர்ந்து பயிற்சி மையத்தில் இருந்து 30 கோடியை பறிமுதல் செய்தனர். ₹150 கோடி வருமானத்துக்கு முறையான கணக்கு காட்டாமல், வரி ஏய்ப்பு செய்துள்ளது கண்டுபிடிக்கப்பட்டது. பயிற்சி மையத்தின் பெயரில் உள்ள வங்கி கணக்குகளை நேற்று அதிகாரிகள் ஆய்வு செய்தனர். சம்பந்தப்பட்ட வங்கிக்கு சென்று, அதிகாரிகளிடம் விசாரித்தனர். நேற்று பிற்பகலுடன் சோதனையை முடித்துக்கொண்டனர்.