மேட்டூர்: சேலம் மாவட்டம், மேட்டூரை அடுத்த குஞ்சாண்டியூரில் ஹைட்ரஜன் பெராக்சைடு உற்பத்தி செய்யும் ரசாயன ஆலை உள்ளது. 2 மாதங்களுக்கு முன், இந்த ஆலையில் இருந்து வாயு கசிவு ஏற்பட்டதை தொடர்ந்து நடத்திய போராட்டத்தால் சில நாட்கள் ஆலையில் உற்பத்தி நிறுத்தப்பட்டது. தற்போது மீண்டும் ஆலை இயங்க தொடங்கியுள்ளது. இந்நிலையில், நேற்று இரவு மீண்டும் குஞ்சாண்டியூர், பனங்காடு, கண்ணாடி மாரியம்மன் கோயில் பகுதிகளில் துர்நாற்றத்துடன் வாயு நெடி வீசியதால் குழந்தைகளுக்கு மூச்சுத்திணறல் ஏற்பட்டது. தொடர்ந்து வாயுகசிவு அதிகமானதால், ஆவேசமடைந்த நூற்றுக்கணக்கான மக்கள் ஆலைக்குள் அதிரடியாக நுழைந்தனர். இதையடுத்து ஆலையின் இயக்கத்தை நிர்வாகம் நிறுத்தியது.
இதுபற்றி அறிந்த மேட்டூர் டிஎஸ்பி சவுந்தர்ராஜன் தலைமையில் போலீசார் ஆலைமுன் குவிக்கப்பட்டனர். இதனிடையே, ஆலைக்குள் சென்ற பொதுமக்களில் 5 பேருக்கு, கடும் மூச்சுத்திணறல் ஏற்பட்டு மயங்கி விழுந்தனர். உடனடியாக அவர்கள் ஆம்புலன்ஸ் மூலம் மேட்டூர் அரசு மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டனர்.