புதுடெல்லி: டெபாசிட் வட்டியை வங்கிகள் குறைத்ததால், இதை நம்பியுள்ள மூத்த குடிமக்கள் அதிர்ச்சி அடைந்துள்ளனர். குறுகிய கால கடன்களுக்கான ரெப்போ வட்டியை ரிசர்வ் வங்கி குறைத்ததை தொடர்ந்து வீடு, வாகனம், தனிநபர் கடன்கள் மற்றும் சிறு, குறு தொழில் கடன்களுக்கான வட்டியை பல்வேறு வங்கிகள் குறைத்துள்ளன. அதோடு, டெபாசிட் வட்டிகளும் குறைக்கப்பட்டு வருகின்றன. உதாரணமாக, பாரத ஸ்டேட் வங்கி மூத்த குடிமகன்களுக்கான டெபாசிட் வட்டியை 1-2 ஆண்டுகளுக்கு 7 சதவீதத்தில் இருந்து 6.9 சதவீதமாகவும், 1 லட்சம் வரை இருப்பு வைத்துள்ள சேமிப்பு கணக்குகளுக்கான வட்டியை 3.5 சதவீதத்தில் இருந்து 3.25 சதவீதமாகவும் குறைத்துள்ளது.
பெரும்பாலான மூத்த குடிமகன்கள், ஓய்வுக்கு பிறகு அதிக ரிஸ்க் எடுக்காமல் பணத்தை வங்கிகளில் டெபாசிட் செய்து வட்டி பெற்று வந்தனர். பாரத ஸ்டேட் வங்கியின் சமீபத்திய புள்ளிவிவரப்படி சுமார் 4.1 கோடி மூத்த குடிமகன்கள் சுமார் ₹14 லட்சம் கோடியை சேமிப்பு திட்டங்களில் முதலீடு செய்துள்ளனர். தற்போது வட்டி குறைக்கப்படுவதால் அவர்கள் கடன் பத்திரங்கள் போன்றவற்றில் முதலீடு செய்தால்தான் அதிக வருவாய் ஈட்ட முடியும் என்ற நிலை ஏற்பட்டுள்ளது. பெருமபாலான மூத்த குடிமகன்கள் இவ்வாறு ரிஸ்க் எடுக்க விரும்புவில்லை. இதனால் வட்டி குறைப்பால் அவர்கள் கவலை அடைந்துள்ளனர்.