சங்கரன்கோவில்: சங்கரன்கோவில் அருகே வெறிநாய்கள் கடித்து குதறியதில் 2ம் வகுப்பு மாணவன் பலியானான். இச்சம்பவம் அப்பகுதி மக்களை சோகத்தில் ஆழ்த்தியுள்ளது. நெல்லை மாவட்டம் சங்கரன்கோவில் அருகே உள்ள ரெங்கசமுத்திரத்தை சேர்ந்த சேதுபதி மகன் சந்தோஷ் (8). அங்குள்ள பள்ளியில் 2ம் வகுப்பு படித்து வந்தான். சந்தோஷ் வழக்கமாக பள்ளி முடிந்து வீட்டுக்கு திரும்பியதும் விளையாட சென்று விட்டு இரவு 7 மணிக்கு வீட்டுக்கு வருவது வழக்கம்.
இந்நிலையில் நேற்று முன்தினம் மாலையும் விளையாட சென்ற சந்தோஷ், வெகுநேரமாகியும் வீடு திரும்பவில்லை. இதனால் பெற்றோர் பல இடங்களில் தேடிப் பார்த்தனர். அப்போது அதே பகுதியைச் சேர்ந்த அந்தோணிராஜ் என்பவரது தோட்டத்தின் அருகே சத்தம் கேட்கவே சென்று பார்த்தனர். அங்கு 10க்கும் மேற்பட்ட வெறிநாய்கள், மாணவன் சந்தோசை கடித்து குதறிக் கொண்டிருந்தன. அதிர்ச்சியடைந்த பெற்றோர், வெறி நாய்களை விரட்டிவிட்டு பார்த்தபோது சம்பவ இடத்திலேயே மாணவன் சந்தோஷ் பலியாகி கிடந்ததை கண்டு கதறி அழுதனர். வெறிநாய்கள் கடித்து மாணவன் பலியான சம்பவம், அப்பகுதி மக்களை சோகத்திலும் பீதியிலும் ஆழ்த்தி இருக்கிறது.