×

உள்துறை அமைச்சர் அமித் ஷாவை விமர்சித்ததாக தொடரப்பட்ட அவதூறு வழக்கு: நீதிமன்றத்தில் ஆஜரான ராகுல் காந்திக்கு ஜாமீன்

அகமதாபாத்: உள்துறை அமைச்சர் அமித் ஷாவை விமர்சித்ததாக தொடரப்பட்ட அவதூறு வழக்கில், நீதிமன்றத்தில் ஆஜரான ராகுல் காந்திக்கு ஜாமீன் வழங்கப்பட்டுள்ளது. மக்களவை தேர்தலின்போது, மத்திய பிரதேச மாநிலம், ஜபல்பூர் பகுதியில் பிரச்சாரத்தில் ஈடுபட்ட காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி, மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷாவை கொலை குற்றம் சாட்டப்பட்டவர் என்று பேசியிருந்தார். அவரது பேச்சு அனைத்து ஊடகங்களிலும் வெளியான நிலையில் குஜராத் மாநிலம் அகமதாபாத்தில் உள்ள பா.ஜனதா கவுன்சிலர் கிருஷ்ணாவதன் பிரம்பாட் என்பவர் ஒரு அவதூறு வழக்கு தொடர்ந்தார். இதுகுறித்து அவர் தாக்கல் செய்த மனுவில், அமித் ஷாவை கொலை குற்றவாளி என்று இழிவாக பேசி இந்திய தண்டனை சட்டம் 499 மற்றும் 500வது பிரிவுகளின் கீழ், ராகுல் காந்தி அவதூறு குற்றம் இழைத்துள்ளார், என்று குறிப்பிடப்பட்டிருந்தது.

இந்த வழக்கை விசாரித்த அகமதாபாத் நீதிமன்றம், நேரில் ஆஜராகுமாறு ராகுல் காந்திக்கு சம்மன் அனுப்பியது. இந்நிலையில், இவ்வழக்கில் ஆஜராவதற்காக டெல்லியில் இருந்து அகமதாபாத் நகருக்கு வந்த ராகுல் காந்தி, பட்டேல் இனத்தவர்களுக்கு இடஒதுக்கீடு கேட்டு போராடிவரும் ஹர்த்திக் பட்டேலுடன் ஓட்டலில் உணவு அருந்தினார். இதைதொடர்ந்து, இன்று பிற்பகல் ராகுல் காந்தி நீதிமன்றத்தில் ஆஜரானார். இந்த வழக்கு தொடர்பாக நீதிபதியிடம் வாக்குமூலம் அளித்த அவர், தான் குற்றவாளி அல்ல என்று குறிப்பிட்டார். அப்போது, ராகுல் காந்தியின் வழக்கறிஞர் அவருக்கு இவ்வழக்கில் ஜாமின் அளிக்க வேண்டும் என மனுதாக்கல் செய்தார். இதையடுத்து, ராகுல் காந்திக்கு ஜாமின் வழங்கிய நீதிபதி, இவ்வழக்கின் மறுவிசாரணையை டிசம்பர் 7ம் தேதிக்கு ஒத்திவைத்துள்ளார்.



Tags : Rahul Gandhi , Rahul Gandhi, Amit Shah, defamation case, bail
× RELATED சாதிவாரி கணக்கெடுப்பை எந்த...