சிவகங்கை: சிவகங்கையில் புதுமணப்பெண்ணை பாலியல் பலாத்காரம் செய்த பாஜ கட்சியின் கலை மற்றும் கலாச்சார பிரிவு மாவட்ட தலைவரை போலீசார் கைது செய்தனர். சென்னை, துரைப்பாக்கம், கண்ணகி நகரை சேர்ந்தவர் ஜெயராணி. இவர் சிவகங்கை அருகே பச்சேரியை பூர்வீகமாக கொண்டவர். இவரது மகனுக்கு சிவகங்கை அருகே மதுரை ரோட்டில் உள்ள ஒரு கிராமத்தை சேர்ந்த 22 வயது பெண்ணுடன், கடந்த மாதம் 11ம் தேதி திருமணம் நடந்தது. திருமணம் முடிந்து தம்பதி சென்னையில் வசித்து வந்தனர். இந்நிலையில் புது மணப்பெண்ணுக்கு தொடர்ந்து வாந்தி, மயக்கம் ஏற்பட்டுள்ளது. இதனால் அங்கு மருத்துவமனைக்கு அழைத்து சென்றுள்ளனர். பரிசோதித்த மருத்துவர்கள் அவர் மூன்றரை மாத கர்ப்பமாக உள்ளதாக தெரிவித்துள்ளனர்.
தொடர்ந்து ஸ்கேன் செய்து பார்த்ததிலும் கர்ப்பம் உறுதி செய்யப்பட்டது. இதனால் மாப்பிள்ளை வீட்டார் அதிர்ச்சியடைந்தனர். இதுகுறித்து மணப்பெண்ணிடம் கேட்டபோது, சிவகங்கையில் மதுரை முக்கில் உள்ள தனியார் நர்சிங் கல்லூரியில் படித்தபோது, நர்சிங் கல்லூரி உரிமையாளரும், முதல்வருமான சிவகுருதுரைராஜ்(61) தனக்கு கூடுதல் மதிப்பெண் வழங்கி தேர்ச்சி பெற வைப்பதாக கூறி பாலியல் பலாத்காரத்தில் ஈடுபட்டதாக கூறியுள்ளார். மேலும், ‘‘இந்த விஷயத்தை யாரிடமும் தெரிவிக்கக்கூடாது. அப்படி தெரிவித்தால் கொன்று விடுவேன்’’ என மிரட்டியதாகவும், அதனால்தான் யாரிடமும் இதை தெரிவிக்கவில்லை என கூறியுள்ளார். இதையடுத்து ஜெயராணி அளித்த புகாரின்பேரில் சிவகங்கை அனைத்து மகளிர் போலீஸ் எஸ்ஐ பிரபா, டவுன் போலீஸ் இன்ஸ்பெக்டர் மோகன் ஆகியோர் வழக்கு பதிந்து சிவகுருதுரைராஜை நேற்று மாலை கைது செய்தனர். சிவகுருதுரைராஜ் பாஜ கட்சியின் சிவகங்கை மாவட்ட கலை, கலாச்சார பிரிவின் மாவட்டத்தலைவராக உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
பாதிக்கப்பட்டிருந்தால் புகார் தெரிவிக்கலாம்
சிவகுருதுரைராஜ் நடத்தி வந்த தனியார் நர்சிங் கல்லூரியில், இதுபோல் மாணவிகள் வேறு யாராவது பாதிக்கப்பட்டிருந்தால் புகார் தெரிவிக்கலாம். புகார்கள் ரகசியமாக வைக்கப்பட்டு நடவடிக்கை எடுக்கப்படும் என சிவகங்கை டவுன் போலீஸ் இன்ஸ்பெக்டர் மோகன் தெரிவித்துள்ளார்.