மதுரை: தமிழ் ஓலைச்சுவடிகளை நவீன டிஜிட்டல் முறையில் பாதுகாக்க ஒதுக்கப்பட்ட நிதி, மற்றும் பணி நிலவரம் குறித்து பதில் அளிக்க மத்திய கலாச்சாரத்துறை, மற்றும் தமிழக கல்வெட்டியல் துறைக்கு உயர்நீதிமன்ற மதுரைக்கிளை உத்தரவிட்டுள்ளது. தஞ்சை சரஸ்வதி மஹால் நூலகத்தில் 16ம் நூற்றாண்டைச் சேர்ந்த 7 ஆயிரம் தலைப்புகள் கொண்ட ஓலைச்சுவடிகள் மரப்பெட்டிகளில் வைக்கப்பட்டுள்ளதால் அவை சிதைவடைவதற்கான வாய்ப்புகள் உள்ளதாகவும், அவற்றை நவீன டிஜிட்டல் முறையில் பாதுகாக்க உத்தரவிட வேண்டும் என்றும் உயர்நீதிமன்ற மதுரை கிளையில் பொது நல வழக்கு தாக்கல் செய்யப்பட்டது.
இந்த வழக்கை விசாரித்த நீதிபதிகள் மகாதேவன், எஸ்.எஸ்.சுந்தர் அமர்வில் மனுவை விசாரித்து, 1980 ஆம் ஆண்டில் உலகத்தமிழ் மாநாட்டின் போதே ஓலைச்சுவடிகளை பாதுகாக்க நிதி ஒதுக்கப்பட்ட நிலையில் 2019 வரை பணிகள் நிறைவடையாதது ஏன் என்றும் அதனை நவீன டிஜிட்டல் முறையில் பாதுகாக்க ஒதுக்கப்பட்ட நிதி மற்றும் செலவு விவரம், பணி நிலவரம் குறித்து மத்திய கலாச்சாரத்துறை, தமிழக கல்வெட்டியல் துறை அறிக்கை தாக்கல் செய்ய உத்தரவிட்டு, இந்த வழக்கை வருகின்ற அக்டோபர் 30 ஆம் தேதிக்கு ஒத்திவைத்தனர்.