×

தமிழ்நாட்டிற்கு வருகை தரும் சீன அதிபர் ஜின்பிங், பிரதமர் மோடிக்கு சிறப்பான வரவேற்பு அளிக்க வேண்டும்: முதல்வர் எடப்பாடி வேண்டுகோள்

சென்னை: இந்திய-சீனா நாடுகளின் பேச்சுவார்த்தைக்கு தமிழ்நாட்டிற்கு வருகை  புரியும் சீன நாட்டின் அதிபருக்கும், பிரதமருக்கும் சிறப்பான  வரவேற்பு அளிக்க வேண்டும் என்று முதல்வர் எடப்பாடி கோரிக்கை விடுத்துள்ளார்.
இதுகுறித்து முதல்வர் எடப்பாடி பழனிசாமி நேற்று வெளியிட்டுள்ள அறிக்கை: இந்தியா-சீனா நாடுகளுக்கு இடையேயான நல்லுறவை மேம்படுத்த சீன அதிபர் ஜி ஜின்பிங், இந்திய பிரதமர் நரேந்திர மோடி ஆகியோர் இடையே அக்டோபர் 11  மற்றும் 12 ஆகிய நாட்களில் மாமல்லபுரத்தில் பேச்சுவார்த்தை நடக்கிறது. இது தமிழ்நாட்டிற்கே பெருமை சேர்ப்பதோடு மட்டுமல்லாமல், தமிழ்நாட்டின் மதிப்பை உலக அரங்கில் உயர்த்தியுள்ளது. இந்த நிகழ்ச்சிக்கு தமிழ்நாட்டில் உள்ள  மாமல்லபுரத்தை தேர்வு செய்தமைக்கு பிரதமருக்கு நன்றி தெரிவித்துக்கொண்டு, தமிழ்நாட்டு மக்கள் சார்பாகவும், தமிழ்நாடு அரசின் சார்பாகவும் இந்த இரு உலக தலைவர்களையும் வரவேற்கிறேன்.

பல நூற்றாண்டுகளுக்கு முன்பிருந்தே வணிக ரீதியாகவும், கலாச்சார ரீதியாகவும் சீனாவிற்கும், தமிழ்நாட்டிற்கும் இடையே தொடர்பு இருந்துள்ளது என்பது வரலாறு. பண்டைய சீன நாட்டின் தூதுவர் யுவான் சுவாங், பல்லவ நாட்டிற்கு வந்து  சென்றிருக்கிறார் என்பதும், அக்காலத்தில்  பல்லவ நாட்டின் துறைமுகமாக விளங்கிய இதே மாமல்லபுரம், இந்த நிகழ்ச்சிக்கு தேர்வு செய்யப்பட்டது மிகவும் பொருத்தமானது என கருதுகிறேன். சீன நாட்டுடன் கடல் வழி வியாபாரம்  மாமல்லபுரம் வழியாக நடைபெற்றதாக வரலாறு கூறுகிறது. அதேபோல், சோழர்கள் காலத்திலும், சீனாவுடனான வணிக தொடர்புகள் வலுவாக இருந்துள்ளது தமிழர்களுக்கு பெருமை சேர்ப்பதாகும். ஏற்கனவே 1956ம் ஆண்டு, சீன நாட்டு பிரதமர்  சூ என்லாய், மாமல்லபுரம் அருகில் உள்ள குழிப்பான்தண்டலம் கிராமத்திற்கு வருகை தந்ததை இங்கே நினைவுகூர விரும்புகிறேன்.இந்த இரு தலைவர்களின் சந்திப்பு  யூனெஸ்கோ உலக பாரம்பரிய மையமான மாமல்லபுரத்தில் நடைபெறுவது,  பண்டைய வரலாற்றின் தொடர்ச்சியாகவே அமைந்துள்ளது குறிப்பிடத்தக்கது.   

சீன நாட்டு குடியரசு தலைவரின் வருகை, தமிழ்நாட்டுக்கு மட்டுமின்றி, இந்தியாவிற்கே வரலாற்று சிறப்பு வாய்ந்த ஒரு நிகழ்வாகும். தமிழ்நாட்டிற்கு வருகை புரியும் சீன நாட்டு குடியரசு தலைவர் ஜின்பிங்குக்கும், பிரதமர் நரேந்திர மோடிக்கும்,  தமிழ்நாட்டு மக்கள் அனைவரும் உள்ளார்ந்த உணர்வோடு உற்சாக வரவேற்பு அளிக்க வேண்டும் என அன்புடன் கேட்டுக்கொள்கிறேன்.இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

Tags : Xinping ,Tamil Nadu ,Chinese ,Modi ,Edappadi ,CM , Tamil Nadu, Chinese President Jinping, Prime Minister Modi and Chief Minister Edappadi
× RELATED சுதந்திர போராட்டம் குறித்த பழங்கால...